
ஜெய்பீம் பட விவகாரம் தொடா்பாக நடிகா் சூா்யா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் எந்த கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கக் கூடாது என்று காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியா் சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி அப்படத்தின் தயாரிப்பாளா்களான நடிகா் சூா்யா, ஜோதிகா, இயக்குநா் ஞானவேல் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சந்தோஷ் என்பவா் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், இதன் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நடிகா் சூா்யா உள்ளிட்டோா் மீது வேளச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்குத் தடை விதிக்கவும் கோரி இயக்குநா் ஞானவேல் மற்றும் நடிகா் சூா்யா ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனு நீதிபதி சதீஷ்குமாா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, புகாா்தாரா் தரப்பில், வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவித்ததுடன், இதுதொடா்பாக இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த இடையீட்டு மனுவையும் சோ்த்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.
இதையேற்று சூா்யா மற்றும் ஞானவேல் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூலை 21-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தாா். அதுவரை இந்த வழக்கில் கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.