உதயநிதி ஸ்டாலின் தற்போது நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்துள்ளார். ஹிந்தியில் ஆர்டிக்கிள் 15 என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு மாமன்னன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் தயாரிக்கும் இந்தப் படத்தில் வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடிக்கவிருக்கின்றனர். இந்தத் தகவல் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
இந்தப் படத்தின் அறிவிப்பு போஸ்டரில் மாமன்னன் தலைப்பு கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் காளை மாடுகள் அதிகம் காணப்படுகின்றன. இதனையடுத்து இந்தப் படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் படமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.