நடிகை பிரியா பவானி சங்கர் முதன்முதலாக தெலுங்குப் படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் சமீபத்தில் ஹாஸ்டல், யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. குறிப்பாக தனுஷுடன் இவர் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவியுடன் இணைந்துள்ள அகிலன், ராகவா லாரன்ஸுடன் இணைந்து நடித்துள்ள ருத்ரன், எஸ்.ஜே.சூர்யாவுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள பொம்மை ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளன. மேலும் சிம்பு, கௌதம் கார்த்திக்குடன் இணைந்து பத்து தல, கமல்ஹாசனின் இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்துவருகிறார்.
தற்போது தெலுங்கு படத்தில் முதன்முதலாக நடிக்க உள்ளார். பெங்குயின் படத்தின் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சத்யதேவ் நடிக்கும் 26வது படத்தில் பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார். பெயரிடப்படாத இப்படத்தில் இணைந்துள்ளதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
சரண் ராஜ் இசையமைக்க, மணிகண்டன் கிரிஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.