பிரியங்கா மோகனைத் தொடர்ந்து தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த மற்றொரு கதாயநாயகி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் முன்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன.
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க , முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார்.
இந்த நிலையில் மற்றொரு கதாநாயகியாக நிவேதிதா சதிஷ் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கிய சில்லு கருப்பட்டி படம் மூலம் பிரபலமானவர் நிவேதிதா சதிஷ். சமீபத்தில் இவர் நடித்த இணையத் தொடரான சுழல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் மில்லர் படத்தில் நடிப்பது குறித்து நிவேதிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, என் இதயத்துக்கு நெருக்கமான வேடத்தில் நடிப்பதில் பெருமைப்படுகிறேன். என்னை நம்பியதற்கு நன்றி கேப்டன் அருண் மாதேஸ்வரன். எனக்கு எப்பொழுதும் முன்மாதிரியாக இருக்கும் நடிகர் தனுஷுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
1930களின் பின்னணியில் நடக்கும் கதையாக கேப்டன் மில்லர் உருவாகிவருகிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். அருண் மாதேஸ்வரனின் முந்தைய படங்களான ராக்கி, சாணிக் காயிதம் படங்களை ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்சன் படமாக கேப்டன் மில்லர் இருக்கும் என கூறப்படுகிறது.