காதலிப்பதாக கூறி வாலிபரை ஏமாற்றிய துணை நடிகை மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் யூடியூப் பக்கம் மூலம் தனது கவிதைகளை விடியோவாக வெளியிட்டு வந்துள்ளார்.
தனது விடியோக்களில் நடிப்பதற்காக துணை நடிகை திவ்யபாரதி என்பவரை அணுகியுள்ளார்.
திவ்யபாரதியும் ஆனந்தராஜின் விடியோக்களில் நடித்துவந்துள்ளார். இருவருக்கும் இடையிலான நட்பு காதலாக மலர்ந்துள்ளது. திவ்யபாரதியை திருமணம் செய்துகொள்ள ஆனந்தராஜ் விரும்பியுள்ளார். இதற்காக அவர் தனது பெற்றோரின் சம்மதத்தையும் பெற்றுள்ளார். திவ்யபாரதியும் ஆனந்தராஜை திருமணம் செய்துகொள்ள சம்மதித்துள்ளார்.
பிறகு ஆனந்தராஜ் திருமண பேச்சை எடுத்தபோதெல்லாம் திவ்யபாரதி சரியாக பேசுவதில்லை. அவரைத் தவிர்க்க தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில் தனது மருத்துவ ச சிகிச்சைக்கென ரூ.9 லட்சம் தேவை என ஆனந்தராஜிடம் திவ்யபாராதி கூறியிருக்கிறார்.
தனது வருங்கால மனைவிக்கு தானே கொடுக்கிறோம் என நினைத்து, தன்னிடமுள்ள நகைகளை விற்று பணத்தை திவ்யபாரதியிடம் ஆனந்தராஜ் அளித்திருக்கிறார்.
மற்ற நேரங்களில் ஆனந்தராஜிடம் நன்றாக பேசிய திவ்யபாரதி திருமணம் என்றால் மட்டும் முறையாக பதிலளிப்பதில்லை. இதனால் சந்தேகமடைந்து திவ்யபாரதி குறித்து விசாரித்தபோது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பது ஆனந்தராஜுக்கு தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என ஏமாற்றி ரூ.30 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டதாக திவ்யபாரதி மீது காவல்நிலையத்தில் ஆனந்தராஜ் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து ஆனந்தராஜின் புகாரை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.