தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் டீசர் ஆள வந்தான் மற்றும் வாலி திரைப்படங்களின் தழுவலைப்போல் இருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
'என்ஜிகே' படத்துக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் 'நானே வருவேன்' படத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ளார்.
11 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: திரைப்படமாகிறது ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட் வழக்கு
இந்நிலையில், நேற்று இப்படத்தின் டீசர் வெளியானது. இதில், இரட்டை வேடங்களில் தனுஷ் நடித்திருந்த கதாபாத்திரங்கள் இடம்பெற்றன. ஒரு தனுஷ் எதுவும் பேசாத சைக்கோ வில்லனாகவும் மற்றொரு தனுஷ் அமைதியான குடும்பத் தலைவனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். சண்டைக்காட்சிகளிலும் இளம் தனுஷ் மட்டுமே நடித்திருக்கிறார்.
இதனால், இப்படம் ’சைக்கோ திரில்லர்’ வகையில் உருவாகியிருப்பது தெரியவந்துள்ளதால் இது கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த 'ஆள வந்தான்' மற்றும் அஜித் நடித்த 'வாலி' திரைப்படங்களை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
அதேநேரம், ‘செல்வராகவன் கதைப்பஞ்சம் உள்ள இயக்குநர் இல்லை’ என்கிற கருத்தையும் ரசிகர்கள் பதிவு செய்துள்ளனர்.
எஸ்.தாணு தயாரிப்பில் உருவான ‘நானே வருவேன்’ செப்டம்பர் மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.