இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கவிருக்கும் படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ் இயக்குநர்கள் தெலுங்குக்கு செல்வதும் தெலுங்கு இயக்குநர்கள் தமிழுக்கு வருவதும் தற்போது அதிகரித்துள்ளது. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநரான ஷங்கர், ராம் சரண் நடிப்பில் ஒரு தெலுங்கு படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.
லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடித்த 'தி வாரியர்' சமீபத்தில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. விரைவில் ராம் பொத்தினேனி நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக கௌதம் மேனன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதே போல விஜய்யின் 'வாரிசு' படத்தை தெலுங்கு இயக்குநராக வம்சியும், சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்தை தெலுங்கு இயக்குநரான அனுதீப்பும், தனுஷின் 'வாத்தி' படத்தை தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லுரியும் இயக்கி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கவிருக்கின்றனர். இந்தப் படத்துக்கான பாடல்களை இளையராஜா ஏற்கனவே இசையமைத்துவிட்டதாக கங்கை அமரன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை (செப்டம்பர் 21) துவங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் நடிகர்கள் நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.