சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ், தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.
சமீபத்தில் பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் 4 நிமிட காட்சியைப் படக்குழுவினர் வெளியிட்டனர். மேலும், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் குழுமம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தினால் மருத்துவமனையில் உள்ள விஜய் ஆண்டனி விரைவில் குணமடைந்து வருவார் என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
அடிக்கடி சமூக கருத்துகளை தைரியமாக ட்விட்டரில் பதிவிடும் இவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், “வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்...நம்மைப்போல் தன் குடும்பத்தைக் காப்பாற்ற, தினமும் போராடி வாழும் இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர். ஆன்டி பிகிலி” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த ட்வீட் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. சிலர் இந்தப் பதிவுக்கு ஆதரவும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.