நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் விரைவில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகவுள்ள தொடரில் நடிக்கவுள்ளார். இந்தத் தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர். 1978ஆம் ஆண்டு அவள் ஒரு பச்சைக் குழந்தை எனும் திரைப்படம் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை, வெற்றி, நான் சிகப்பு மனிதன் போன்ற 70 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நேரடியாக இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இயக்குநர், தயாரிப்பாளர் நடிகர் என பல பிரிவுகளில் சினிமாவில் பணியாற்றியவர் எஸ்.ஏ. சந்திரசேகர்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டிராபிக் ராமசாமி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்த அவர், நான் கடவுள் இல்லை என்ற படத்துக்கு திரைக்கதை எழுதி நடித்துள்ளார். இவர் அந்தப் படத்தில் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.
இவ்வாறு பல துறைகளில் கால் பதித்த எஸ்.ஏ. சந்திரசேகர் விரைவில் சின்னத் திரை தொடர்களிலும் நடிக்கவுள்ளார்.
ராதிகாவின் தயாரிப்பு நிறுவனமான ராடன் மீடியா தயாரிப்பில் விஜய் தொலைக்காட்சியில் புதிய தொடர் தயாரிக்கப்படுகிறது. இந்தத் தொடரில் முதன்மையான பாத்திரத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கும் இந்தத் தொடருக்கு கிழக்கு வாசல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் பூவே பூச்சூடவா தொடரில் நடித்த ரேஷ்மா, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி தொடரில் நடித்த அஸ்வினி உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.