சின்னத்திரையில் கோலோச்சிய நடிகர்களின் நடிப்பில் புதிய இணையத் தொடர் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் நடித்துவரும் நடிகர்களில் பலர் வெள்ளித்திரையில் நடிக்கத் தொடங்கியுள்ளனர். சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர், புகழ், ராமர், பிரியா பவானி சங்கர் போன்ற பலர் இதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர்.
சமீபத்தில் வெளியாகிவரும் படங்களில் சின்னத்திரை முகங்களை வெள்ளித்திரையில் பார்க்க முடிகிறது. நாள்தோறும் இல்லங்களைத் தேடி வந்து சீரியல்கள் மூலம் மகிழ்விக்கும் சின்னத்திரை நடிகர்கள் அவ்வபோது வெள்ளித்திரைக்கு செல்வது ரசிகர்களிடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில் சின்னத்திரையில் நடித்து வந்த நடிகர்கள் நடிப்பில் புதிய இணையத் தொடர் வெளியாகியுள்ளது. ’மாய தோட்டா’ எனப் பெரிடப்பட்டுள்ள இந்தத் தொடர், திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.
இந்த இணையத்தொடரில் சைத்ரா ரெட்டி, அமித் பார்கவ், குமரன் தங்கராஜன், வைஷாலி தனிகா உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சைத்ரா ரெட்டி வலிமை படத்திலும், குமரன் தங்கராஜன் வதந்தி தொடரிலும் நடித்துள்ளனர். எனினும் சின்னத்திரை நடிகர்கள் முதன்மை பாத்திரங்களில் இணையத்தொடரில் நடிப்பது இதுவே முதல்முறை. இதனால் இந்த இணையத்தொடர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சைத்ரா, குமரன் ஆகியோரின் ரசிகர்கள் அவர்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.