பெருமையாக இருக்கிறது கார்த்திக் சுப்புராஜ்: ரஜினிகாந்த்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த நவ.10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இதில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இளவரசு, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
சினிமாவில் நடிக்க ஆசைப்படும் கேங்க்ஸ்டர் சீசரும் (ராகவா லாரன்ஸ்) இயக்குநராக அறிமுகமாகும் கிருபாவும் (எஸ்.ஜே.சூர்யா) எதிர்கொள்ளும் பிரச்னைகளாக உருவாகியிருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
இதையும் படிக்க: ஏமாற்றி வெல்லும் ஹீரோக்கள்! கார்த்திக் சுப்புராஜின் தந்திரம்?
இப்படம் வெளியான 4 நாள்களில் உலகளவில் ரூ.35 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் படம் குறித்து கடிதம் வாயிலாகத் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதில், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு. லாரன்ஸால் இப்படியும் நடிக்க முடியுமா? என பிரம்மிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருக்கிறார். திருவின் கேமரா விளையாடி இருக்கிறது. தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை சந்தோஷ் நாராயணன் இந்தப் படம் மூலம் நிரூபித்திருக்கிறார். பிரம்மாண்டமாக இப்படத்தை எடுத்த தயாரிப்பாளருக்கு என் தனி பாராட்டுகள். படத்தில் வரும் பழங்குடிகள் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கின்றனர். இந்தப் படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மக்களைக் கைதட்ட, சிந்திக்க, அழ, பிரம்மிக்க வைக்கிறார். நான் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் கார்த்திக் சுப்புராஜ். படக்குழுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: மறுவெளியீட்டுக்குத் தயாரான ஆளவந்தான்!