ஈரமான ரோஜாவே தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை ஸ்வாதி, சினிமாவில் நடிகர் கார்த்தியுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சின்னத்திரையில் ஈரமான ரோஜாவே தொடரின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட ஸ்வாதி, கார்த்தியுடன் நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஸ்வாதிக்கு அவரின் ரசிகர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நண்பகல் 1 மணிக்கு ஈரமான ரோஜாவே பாகம் 2 தொடர் ஒளிபரப்பாகிவருகிறது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டாவது சீசனில் திரவியம் ராஜகுமரனுக்கு ஜோடியாக நடிகை ஸ்வாதி நடித்து வருகிறார். சித்தார்த்துக்கு ஜோடியாக கெபிரியல்லா நடிக்கிறார்.
இந்தத் தொடரில் நடிகை ஸ்வாதிக்கு ஆரம்பம் முதலே நல்ல வரவேற்பு இருந்தது. அதோடு அவ்வபோது ஸ்வாதி அளிக்கும் நேர்காணல்களுக்கும் அவரின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மதிப்பைக் கூட்டியது.
தொடர்களில் மட்டுமல்லாமல் விளம்பரங்களில் நடித்து வந்த ஸ்வாதி, தற்போது வெள்ளித்திரையில் நடிக்கவுள்ளார்.
சினிமாவில் நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் நடிகை ஸ்வாதி ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
ஸ்வாதியின் சமூக வலைதளத்தில் அவர் பதிவிடும் படங்களின் கீழ், சினிமாவில் நடிக்கவுள்ளதற்காக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை ஸ்வாதி கர்நாடகத்தைச் சேர்ந்தவர். 26 வயதான ஸ்வாதி, 2017-ல் பியூடிஃபுல் மனசுஹாலு என்ற கன்னட படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கமரோட்டு செக்போஸ்ட், காட்டு கதே உள்ளிட்ட கன்னட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.