பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானின் டீப் பேக் விடியோ வெளியிட்டவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆமிர் கானின் நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பினை பெற்றாலும் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது. சமீபத்தில் அவர் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட இருப்பதால் இனி சில ஆண்டுகளுக்கு நடிக்க போவதில்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆமிர்கான் தனது தயாரிப்பு நிறுவனமான ஏகேபி (ஆமிர் கான் புரடக்ஷன்ஸ்) தயாரிப்பில் ‘லாகூர், 1947’ என்ற தலைப்பில் புதிய படத்தினை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஆமிர் கான் நடிக்கவில்லை.
அரசியல் சார்புடையதாக ஆமிர் கான் பேசியதாக டீப் பேக் விடியோ இணையத்தில் சமீபத்தில் வெளியாகியிருந்தது. ராஜஸ்தான் எம்.எல்.ஏ. இதனைப் பகிரவே இன்னும் வைரலானது. இதனைத் தொடர்ந்து, ஆமிர் கான் அலுவலகம் காவல்துறையிடம் புகார் அளித்தது.
பின்னர், அந்த விடியோவை வெளியிட்ட அடையாளம் தெரியாத நபர் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
2012இல் சத்யமேவ ஜெயதே எனும் தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் ஆமிர்கான் பேசிய விடியோவை ஏஐ மூலம் மாற்றி உள்ளது தெரியவந்துள்ளதாகவும், ஐபிசி 419, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.