நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும், நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இவரை நட்சத்திர நடிகராக மாற்றியது. அதன்பின் கீதா கோவிந்தம், நோட்டா, டியர் காம்ரெட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனாவுக்கு திரையுலகில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, டியர் காம்ரெட் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்தனர்.
இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து, அல்லு அர்ஜூன், கார்த்தி, விஜய், ரன்பீர் கப்பூர் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் பான் இந்தியா படங்களில் ராஷ்மிகா நடித்து வருகிறார்.
இதற்கிடையே, விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, இருவரும் இதுவரை கருத்து சொல்லவில்லை.
இதையும் படிக்க | கோல்டன் குளோப் விருதுகளை குவித்த ஓப்பன்ஹெய்மர்
சில நாள்களுக்கு முன்னதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த விஜய் தேவரகொண்டா, ‘நிறைய நடக்கிறது. ஆனால், இந்த ஒன்று உண்மையிலேயே சிறந்தது. விரைவில் அறிவிக்கிறேன்’ என ஆணும் பெண்ணும் கைகோர்த்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவை தொடர்ந்து, விரைவில் விஜய் தேவரகொண்டா தனது காதலித்து குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிக்க: ரசிகர்களை ஏமாற்றிய சமந்தா, விஜய் தேவரகொண்டா: இதுதான் காரணமா?
இந்த நிலையில், விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் பிப்ரவரி இரண்டாவது வாரம் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், இதுகுறித்து இருவரும் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.