கொட்டுக்காளி திரைப்படத்துக்கு சர்வதேச விருது!

‘கொட்டுக்காளி’ திரைப்படம் ‘நேட்டிவா’ விருதுக்கு தேர்வாகியுள்ளது.
கொட்டுக்காளி
கொட்டுக்காளி
Published on
Updated on
1 min read

‘கொட்டுக்காளி’ படத்துக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் நடைபெற்ற விழாவில் ‘கொட்டுக்காளி’ திரைப்படம் ‘நேட்டிவா’ விருதை வென்றுள்ளது.

அல்டெர்நேட்டிவா திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் (அல்டெர்நேட்டிவா ஃபிலிம் ஃபெஸ்டிவல் அவார்ட்ஸ் 24) உலகெங்கிலும் பல்வேறு மொழிகளில் வெளியான சிறந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆசிய நாடுகளில் வெளியான படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக தமிழில் வெளியான கொட்டுக்காளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் நேட்டிவா விருதைப் பெற்றுள்ளது.

சமூகத்தில் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் கலாசார முறைகளில் இருக்கும் அவலங்களை தோலுரித்துக் காட்டியிருப்பதாக நடுவர் குழுவினரின் பாராட்டுகளை கொட்டுக்காளி பெற்றுள்ளது.

பிஎஸ் வினோத்ராஜின் இரண்டாவது படமான கொட்டுக்காளி, இந்தியாவில் சாமானிய மக்கள் வாழும் சமூகத்தில் நிலவும் சாதி, மதப் பாகுபாடுகளின் தாக்கம் ஆபத்தை விளைவிக்கும் வகையில் மக்களிடையே இருப்பதை வெளிக்காட்டுகிறது என்றும் விருது வழங்கும் அமைப்பால் பாராட்டுகளைப் பெற்றுள்ளது கொட்டுக்காளி.

நடிகர் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவான கொட்டுக்காளி பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பின், கடந்த ஆக. 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது, அமேசான் ஓடிடியில் பார்க்கலாம். ஓடிடி வெளியீட்டுக்குப் பின் கொட்டுக்காளி பரவலான பார்வையையும் கவனத்தையும் பெற்றுக் கொண்டிருக்கிறது.

கொட்டுக்காளி திரைப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com