என்கவுன்டருக்கு ஆதரவான படமா? சர்ச்சையில் வேட்டையன்!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் முன்னோட்ட விடியோ சர்ச்சையை சந்தித்துள்ளது.
ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா தயாரித்த இப்படம் வருகிற அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
லால் சலாம், இந்தியன் - 2 படங்களின் தோல்வியால் லைகா நிறுவனம் நிதி நெருக்கடியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. வேட்டையன் படத்தின் வெற்றியைப் பொறுத்தே விடாமுயற்சியின் நிலை தெரிய வரும்.
இந்த நிலையில், நேற்று (செப். 20) சென்னையில் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், நடிகர்கள் ரஜினிகாந்த், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா, ரித்திகா சிங் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்வில், வேட்டையன் படத்தின் முன்னோட்ட விடியோவும் வெளியிடப்பட்டது.
ஆனால், அந்த டீசரில் நடிகர் ரஜினிகாந்த், “ என்கவுன்டர் என்பது குற்றம் செய்வதர்களுக்கு கொடுக்கும் தண்டனை மட்டுமல்ல.. இனிமேல் இதுபோல் நடக்கக் கூடாது என்பதற்காக எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை” என்கிற வசனத்தைப் பேசியுள்ளார்.
இதனால், வேட்டையன் திரைப்படம் என்கவுன்டரை நியாயப்படுத்தும் படமாக உருவாகியிருப்பதாகவே பலரும் கருதுகின்றனர். ஜெய்பீம் போன்ற திரைப்படத்தை இயக்கிய ஞானவேல், காவல்துறை துப்பாக்கியை எடுப்பது சரிதான் என்பதுபோல் வசனம் வைத்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.