

டிமான்ட்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார்.
விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான டிமான்ட்டி காலனி 2 திரைப்படம், கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன் ரூ. 80 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இதனிடையே, டிமான்ட்டி காலனி - 3 பாகத்தின் பணிகளை துவங்கியுள்ளதாக இயக்குநர் அஜய் ஞானமுத்து முன்னதாக தெரிவித்து இருந்தார். அவர் வெளியிட்ட புகைப்படத்தில் ஐரோப்பிலுள்ள மால்டா என்கிற நாட்டில் இருப்பதைக் குறிப்பிட்டு இருந்தார். இதனால், இப்படம் ஐரோப்பாவை மையமிட்டு உருவாகலாம் எனத் தெரிகிறது.
டிமான்ட்டி காலனி - 3 படத்திலும் கதையின் நாயகனாக அருள்நிதியே நடிக்கிறார். இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், டிமான்ட்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள முருகன் கோயிலில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: எஸ்.ஜே. சூர்யா படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.