
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என நடிகர் ஆமீர் கான் தெரிவித்துள்ளார்.
கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய வெற்றி திரைப்படங்களின் மூலம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்-க்கு மிகப் பெரியளவில் ரசிகர் பட்டளமே உருவாகியுள்ளது.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அவர் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில், இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் இணைந்திருப்பது மிகப் பெரியளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும், இந்தப் படத்தில், பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
தற்போது நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ஆமீர் கான், தான் நடிகர் ரஜினிகாந்தின் மிகப் பெரிய ரசிகர் எனவும், இயக்குநர் லோகேஷ் நடிகர் ரஜினியின் திரைப்படம் என்று சொன்னதுமே அதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், அவர் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் குறித்து அவர் பேசியதாவது:
“நானும் இயக்குநர் லோகேஷும் வேறு திரையுலகைச் சேர்ந்தவர்கள். ஆனால், எனக்கு எல்லா வகையான திரைப்படங்களும் பிடிக்கும் என்பதால் அவருடன் பணியாற்றியது அற்புதமான அனுபவமாகவே அமைந்தது. கூலியைப் பொறுத்தவரையில், அந்தப் படத்தில் நான் ஒரு சிறிய பகுதி மட்டுமே. அப்போதுதான், நாங்கள் இருவரும் ஒன்றாகப் படம் உருவாக்க முடிவு செய்தோம். அவர் (லோகேஷ்) கூலி திரைப்படத்துக்கு பின்; கைதி (2-ம் பாகம்) இயக்குகிறார். அதன் படப்பிடிப்பு முடிந்தவுடன், எங்கள் படத்தின் படப்பிடிப்பு துவங்கும். பெரும்பாலும், அடுத்தாண்டு (2026) இரண்டாம் பாதியில் எங்கள் படப்பிடிப்பு துவங்கும்” என அவர் பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.