

ஜன நாயகன் திரைப்படத்தின் சென்சார் வழக்கு இன்று விசாரிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படம் ஜன. 9 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், இறுதி நேரத்தில் தணிக்கை வாரியம் சான்றிதழ் கொடுக்க தாமதித்ததால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தணிக்கை சான்றிதழ் கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், தணிக்கை வாரியத்தின் தரப்பில், “ஜன நாயகன் திரைப்படத்தை மறுதணிக்கை செய்ய கால அவகாசம் கேட்டு தயாரிப்பு நிறுவனத்தை அணுகினோம். மறுதணிக்கை செய்ய கூடுதலாக 20 நாள்கள் தேவைப்படுகிறது. அதன்பின்பும், சான்றிதழ் கொடுக்க எங்கள் தரப்பில் தாமதமானால் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடலாம். வழக்கு தொடராமல் இருந்திருந்தால் இந்நேரம் திரைப்படம் வெளியாகியிருக்கும்” என வாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஜன நாயகன் தயாரிப்பு நிறுவனத் தரப்பு வழக்குரைஞர், “மறுதணிக்கை குறித்து தணிக்கை வாரியம் எங்களை முறையாக அணுகவில்லை. டிச. 29 ஆம் தேதிக்குப் பின் அனைத்தும் எங்களிடமிருந்து மறைக்கப்பட்டுவிட்டது. தணிக்கை வாரிய நடவடிக்கைகள் மன உளைச்சலைத் தருகின்றன. திட்டமிட்டபடி திரைப்படம் வெளியாகாததால் நஷ்டத்தைச் சந்தித்துள்ளோம். மேலும், தணிக்கை விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாதது விதிமீறலாகவே கருத வேண்டும். ” எனக் கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர். இதனால், ஜன நாயகன் திரைப்படம் வெளியீட்டில் மேலும் தாமதம் ஏற்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.