/

பூஜ்ஜியமாகும் ராஜ்ஜியங்கள்

இறையருள் பெற்ற வரகவிகளின் வாயில் தெறித்துவிழும் சொற்களே வேதங்களாகும். இறைவன் இருக்குமிடத்தைக் காட்ட ஒரு பூஜ்ஜியத்துக்குள்ளே ராஜ்ஜியங்களைப் போட்டவன் கண்ணதாசன். பூஜ்ஜியமென்றால் அது ஒரு வட்டம். அந்த வட்ட

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:02 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

இறையருள் பெற்ற வரகவிகளின் வாயில் தெறித்துவிழும் சொற்களே வேதங்களாகும். இறைவன் இருக்குமிடத்தைக் காட்ட ஒரு பூஜ்ஜியத்துக்குள்ளே ராஜ்ஜியங்களைப் போட்டவன் கண்ணதாசன். பூஜ்ஜியமென்றால் அது ஒரு வட்டம். அந்த வட்டமே ராட்டினம். அந்த ராட்டினமே சக்கரம் அல்லது உருளை. நீர் இறைக்கும் இயந்திரமான நோதியா என்று சொல்லப்படும் பாரசீகச் சக்கரம் நிஜமான இந்தியக் கண்டுபிடிப்பு. செக்கின் சுழற்சி வட்டம். கதருக்கு ராட்டினம். விவசாயத்திற்கு பாரசீகச் சக்கரம் என்றெல்லாம் லோகாயதம் முற்காலத்தில் சின்னச் சின்ன தொழில் உலகத்தில் சிறப்புடன் விளங்கின.

இந்த வட்டங்களுக்குத் தொடக்கம் ஏது? முடிவு ஏது? பூஜ்ஜியத்திற்கும் பூமி உஷ்ணமாகித் தடுமாறும் தட்பவெப்பத்திற்கும் உள்ள உறவை ஒருகணம் நினைப்பதற்கு முன்பு, காந்திய சிந்தனையால் கவரப்பட்ட ஒரு தத்துவஞானியை நினைவு கொள்ளலாம்.

காந்தியைப் போல் இவரும் சரித்திரம் படைத்தவர். 2012-ல் உயிருடன் இருந்திருந்தால் 'இங்கிலாந்து காந்தி' அல்லது 'ஜெர்மன் காந்தி' என்ற புகழுக்கும் மரியாதைக்கும் உரியவரான ஷூமேக்கர் நூறு வயதைக் கடந்திருப்பார். 2012ஐ சூழலியல் ஆர்வலர்கள் ஷூமேக்கரின் நூற்றாண்டைக் கொண்டாடும்போது, 'ஒரு படி அரிசி யானைப் பசியைப் போக்காது. ஒரு பிடி அரிசி ஒன்பதாயிரம் எறும்புக்குப் போதும்...' என்று கவிதை படித்த கண்ணதாசனே மறுபடியும் நினைவுக்கு வருகிறார்.

ஷூமேக்கர் என்றதும் 'சிறியதே அழகு' அதாவது 'ஸ்மால் ஈஸ் பியூட்டிஃபுல்' என்ற நூல் எழுதி இன்றுள்ள எரிசக்தி நெருக்கடிக்கும் பூமி உஷ்ணமாகும் நிகழ்ச்சிக்கும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே விடை தேடிய அவரின் தீர்க்கதரிசனம் வியப்பூட்ட வைக்கிறது.

இரண்டாவது உலகப் போர் காலகட்டத்தில் ஹூமேக்கர் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றியவர். மாபெரும் பொருளியல் மேதையான ஷூமேக்கரின் பிற்கால வாழ்வு பர்மாவில் புத்தமத விசாரணையில் இறங்கி இவரும் புத்தரைப் போல் மனிதத் துன்பங்களுக்கு விடைதேடி 'சிறியதே அழகு' மட்டுமல்ல, புத்தமதப் பொருளாதாரம், எரிசக்தி நெருக்கடி, சமூகம், மானுடம் என்றெல்லாம் பற்பல சமூகப் பொருளாதாரப் படைப்புகள் இவரது வழங்கல்.

இருப்பினும், இங்கு பூமி உஷ்ணமாதலுக்குத் தக்க விடை வழங்கலாக எரிசக்திச் செலவு குறைந்த சிறுதொழில் கொண்டே முழு வேலைவாய்ப்புகளையும் மகிழ்ச்சியையும் பெற இயலும் என்ற இவர் கருத்தைச் சற்று ஆராய்வோம்.

பெரிய பெரிய தொழில் நிறுவனங்களைப் பற்றிய  கேள்வியில் இவர், 'இன்றைய உலகின் மாபெரும் தொழில் நிறுவனங்கள் 6 சதவிகித மக்களின் தேவையைத்தான் நிறைவேற்றுகிறது. இது எப்படி நல்ல வேலைத்திறனாகும்?  இது எப்படி மக்களை மகிழ்விக்கும்? உலகில் 94.4 சதவிகித மக்கள் அமெரிக்க மாதிரியைப் பின்பற்ற எண்ணுகின்றனர். உலக மொத்த எரிசக்தியில் 30 சதவிகிதத்தை அமெரிக்கா அழித்து உலகை மாசுபடுத்துவதால் மக்கள் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும்?....'

இதற்கு மாற்றாக .....'உள்ளூர் வளத்தைக் கொண்டு குறைந்த எரிசக்தி செலவில் முழுமையாக  வேலைவாய்ப்புகளைப் பெருக்கி உள்ளூர்த் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். கிராம கைவினைஞர்களும் விவசாயிகளும் முழுப் பயனையும் மகிழ்ச்சியையும் பெற முடியும்....' என்பது இவர் கருத்து. பசுமையக விளைவு, மாசுப் பிரச்னைகளை எரிசக்தி சிக்கனத்தைக் கையாளும் முறைகளால் தீர்த்துவிடலாம்.

கடந்த இருபது ஆண்டுகளில் நச்சுப்புகைகளை உத்தேசமாகக் கணக்கிட்டு வெளியிட்டால் உலகப் பெருந் தொழில் நிறுவனங்கள் வெளியிட்ட பசுமையக மாசுக் காற்றுகள் (கார்பன்-டை- ஆக்ஸைடு முதலியன) 6  ஆயிரம் மில்லியன் டன்கள்.

வளர்ச்சியடைந்த நாடுகளின் மாசு வெளியேற்றம் வளரும் நாடுகளின் அளவைவிடப் பன்மடங்கு கூடுதல் என்பதால் கியோடோ உடன்பாட்டை சாக்காக வைத்துத் தொடர்ந்து அதே பாதையில் தொழில்வளர்ச்சியைக் கொண்டு செல்லும் இந்திய அணுகுமுறையை ஏற்புடையதாகக் கொள்ள முடியாது.

கியோடோ உடன்பாட்டின்படி 'பர் கேபிட்டா' வெளிப்பாடு அதாவது தலா கார்பன் வெளிப்பாடு வீதம் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடப்பட்டு சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளும் 2020-க்குப் பிறகு குறைத்துக் கொள்ளலாம் என்று ஒரு விதிவிலக்கு வழங்கியதை வளர்ந்த நாடுகள் ஏற்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏழை / வளரும் நாடுகளின் நலத்திட்டங்களை ஆதரிக்கும் பண்புடைய ஷூமேக்கரின் நிலைப்பாடு காந்தி, குமரப்பா, தஸ்தோவ்யஸ்கி, கால்பிரைத் கருதும் தத்துவத்தை விளக்குவதாகத் தோன்றுகிறது.

வளங்களைச் சூறையாடித்தான் மக்களை வளப்படுத்த வேண்டுமென்ற கொள்கையில் மக்கள் நலனுக்கும் ஜிடிபி என்று சொல்லப்படும் பொருள் உற்பத்தி வளர்ச்சிக்கும் உள்ள உறவு துண்டிக்கப்பட வேண்டும் என்று கூறும் ஷூமேக்கரின் கருத்தைத் தத்துவமாகச் சொன்னால், 'சுகம் அல்லது இன்பம் பணத்தில் இல்லை' என்பதுவே. தவிரவும், ஹூமேக்கரின் கருத்துப்படி நகரச்சார்புள்ள பெருந்தொழில் நிறுவன வளர்ச்சியால் விவசாயிகளும் கிராம கைவினைஞர்களும் வெளியேற்றப்பட்டு நகரச் சேரிகளில் சங்கமமாகி நோயுறுவதுடன் இப்படிப்பட்ட நகரமயமாதல் நிகழ்ச்சியால் கார்பன் வாயு வெளிப்பாடும் உயர்ந்து கொண்டே செல்லும். ஆனால், கிராம வாழ்வை மையமாகக் கொண்ட சிறுதொழில் / குடிசைத் தொழில் வளர்ச்சி, விவசாயம் ஆகியவை அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும். ஜிடிபி வளர்ச்சி குறைந்தாலும் ஏற்றத்தாழ்வு குறைவாயிருக்கும்.  ஏழை-பணக்கார வேற்றுமை குறைந்து சமத்துவநிலை ஓங்கும். மாசு குறையும். மனமகிழ்ச்சி பெருகும்.

ஜிடிபியை மையமிட்ட வளர்ச்சியில் விவசாய வீழ்ச்சியையும் விவசாயிகளின் தற்கொலை வளர்ச்சியையும் காண்கிறோம். அன்னிய முதலீடுகளின் ஆதிக்கமோ, எரிசக்தி இறக்குமதிக்காக ஏற்றுமதியோ இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தாது. ஏழ்மையின் திறவுகோல் ஜிடிபி வளர்ச்சியில் இல்லை. சின்னச் சின்ன முதலீடுகளில்தான் ஏழைகளின் வாழ்க்கை, வேலைவாய்ப்புகள், வருமானம், மகிழ்ச்சி அடங்கியுள்ளன.

பெரிது பெரிது புவனம் பெரிது என்பதால் கங்கையிலும் சிந்துவிலும் பெரிய பெரிய அணைகளைக் கட்டி பல்லாயிரக்கணக்கான ஏழை-பாழை வீடுகளை இடித்தார்கள். பெரிய பெரிய தொழில் செய்து பெரிய அளவில் பணத்தில் உருண்டு, பெரிய பெரிய கருப்புச் சந்தைகளை உருவாக்கினார்கள். ஏழை-பணக்காரர் ஏற்றத்தாழ்வைப் பெரிதாக்கினர். பெரிய பெரிய தத்துவங்களைப் பேசி பெரிய பெரிய தலைவர்கள் செய்யும் பெரிய பெரிய ஊழல்களும் ஓய்ந்தபாடில்லை. அவ்வளவுதூரம் ஏன்? ஒரு தனியார் கார் நிறுவனம் ஆண்டுக்கு ஆறு லட்சம் கார் உற்பத்தி செய்கிறது என்கின்றனர். 4000 கோடி முதலீடு போட்டு 4000 பேருக்கு வேலை வழங்கியுள்ளனர். வகுத்துப் பார்த்தால் ஒரு மனித வேலைவாய்ப்புக்கு ஒரு கோடி ரூபாய் செலவு. இதே ஒரு கோடி ரூபாய் இருந்தால் ஒரு விவசாயி ஆண்டு முழுவதும் 4000 பேருக்கு வேலை வழங்குவார். ஒரு சிறு கைத்தறி, கதர் யூனிட்டும் 4000 பேருக்கு வேலை வழங்குமே. இதைத்தான் ஷூமேக்கர் மட்டுமல்ல; குமரப்பாவும் காந்தியும் கூறினார்கள்.

நன்மைபயக்கும் எளிமையான பொருளியல் தத்துவத்தைக் குப்பையில் வீசிவிட்டுப் பெருநகரம், பெருந்தொழில் நிறுவன வளர்ச்சி என்ற பாதையில் சென்றால், நகரமயமாதல் என்ற பெயரில் உருவாகும் புதிய நகரங்கள் எல்லாமே குப்பைக் கிடங்குகளாகிவிட்டதைக் கண்கூடாகப் பார்க்கிறோமே!

வரலாற்றைச் சற்றுப் புரட்டிப் பார்த்தால் இந்திய விடுதலையைத் தொடர்ந்து இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு இரண்டு விதமான அணுகுமுறைகள் யோசிக்கப்பட்டன. முதலாவது, காந்திய மாதிரி. இரண்டாவது நேரு மாதிரி.

காந்திய மாதிரியை ஆசார்ய அகர்வாலா உருவாக்கினார். நேரு மாதிரியை மகல நோபிஸ் உருவாக்கினார். காந்திய மாதிரியில் வேளாண்மை, கதர்-கிராமக் கைத்தொழில், குடிசைத்தொழில்-நூற்பாலை, ஜவுளி ஆலை- போன்ற அடிப்படைத் தொழில் வளர்ச்சிக்கும் பாரம்பரியத் தொழில்  நுட்பங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. நேரு மாதிரியில் முழுக்க முழுக்க கனரகத் தொழில்களுக்கு அதிமுக்கியத்துவம் தரப்பட்டது. 1948-ல் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு நேரு மாதிரிக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. காந்தி மாதிரியைப் போற்றிய வினோபாபாவே, ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்றவர்கள் புறந்தள்ளப்பட்டனர். எனினும், நேரு ஒரு மரியாதைக்காக மத்திய அரசின் கீழ் காதி-கிராமக் கைத்தொழில் துறைக்கென்று வாரியம் உருவாக்கினார்.

நேரு-மகலநோபிஸ் மாதிரியில் ஜி.டி.பி. அளவுகோல் வந்தது. திட்டக்கமிஷனின் வளர்ச்சி அணுகுமுறை என்பது, ஒரு மனிதனுக்கு வேலை வழங்க எவ்வளவு மின்சாரம் வேண்டும், எவ்வளவு இரும்புக் கம்பி வேண்டும், எவ்வளவு சிமெண்ட் வேண்டும் என்று ஒன்றுமே நடக்காமல் முன்கூட்டியே திட்டமிடும் ஜி.டி.பி. வளர்ச்சி அணுகுமுறை சரியில்லாதது என்று ஷூமேக்கர் எச்சரித்துள்ளார். இந்த அணுகுமுறையில்  வளர்ச்சிக்கும் கார்பன் கழிவு வெளியேற்றத்துக்கும் பகை உள்ளது. அதேசமயம் காந்திய முன்மாதிரியை அன்றே ஏற்றிருந்தால், இந்தப் பகை ஏற்பட வாய்ப்பே இல்லை. இன்னமும் வேலைவாய்ப்புகளுக்காக விவசாயத்தையும் குடிசைத் தொழிலையும் புறக்கணித்துவிட்டு மாநகரங்களுக்கு மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

கார்பன் மாசுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய காந்தியப் பொருளாதாரத் திட்டங்களைக் காற்றில் பறக்கவிட்டுப் பன்னிரண்டாவது திட்ட அணுகுமுறை எரிசக்திச் செலவுள்ள அதே வளர்ச்சிப் பாதையைக் கொண்டு செல்லும்போது ஒப்புக்காக எரிசக்திச் சிக்கனமான பசுமை வீடுகள், ஒளிவிளக்குகளில் புதிய வடிவம், உருப்படியில்லாத காட்டாமணக்கு டீசல் என்று வரைந்து தள்ளுகிறது. குறைந்தபட்சம்  பிரேசிலைப் பின்பற்றிக் கரும்பு எத்தனால் மூலம் பெட்ரோல் செலவையாவது குறைக்க வழி தேடியிருக்கலாம். அப்படி எதுவும் செய்ய முடியாமல் சாராய சாம்ராஜ்ஜியம் முட்டுக்கட்டை போடுகிறது. டாஸ்மாக் விட்டவழி என்று மாநில அரசும் மயங்கிக் கிடந்தால், உலக அழிவைத் தவிர்ப்பதற்கில்லை.

செய்யும் தொழிலே தெய்வம் என்று திறனாளிகள் சின்னச் சின்னத் தொழில்களில் ஈடுபடப் போதிய ஊக்கம் இல்லை. பன்னாட்டு நிறுவனங்களின் பெருந்தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து முன்னுரிமை பெற்று வருகிறது.

இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் எல்லாமே அமெரிக்காவாகத் துடிக்கின்றன. இத்துடிப்பின் காரணமாக கட்டுப்பாடற்ற மாசுகள், கார்பன் வெளியேற்றம் ஆகியவை அண்டவெளியில் உள்ள உயிர்க்காற்றைத் தின்றவண்ணம் உள்ளன. அண்மையில் (2011) டர்பனில் கூடிய ஐ.நா. சுற்றுச்சூழல் மாநாட்டில், எரிசக்தியில் கட்டுப்பாடு இல்லாமல் இப்படியே ஜி.டி.பி. மார்க்கத்தில் உலக நாடுகள் போய்க் கொண்டிருந்தால் 2050ஐ நெருங்கும்போது மனிதகுலமே அழியும் என்று எச்சரித்துள்ளது. பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தைப் போட்டுக் கொண்டு கண்ணுக்குப் புலப்படாத உயிர்க்காற்றாக அமர்ந்துள்ள இறைவன், வெளியாகிய வானவட்டத்தை மாசாக்கும் இன்னலைப் பொறுக்க முடியாமல் வேறு கிரகத்துக்குப் போய்விட்டால், உலக ராஜ்ஜியங்கள் எல்லாமே பூஜ்ஜியங்களாகிவிடும். உஷார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.