கரையும் சோனியா காங்கிரஸ்

இந்தியக் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரை காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளராகத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னும், பின்னும் திரைமறைவில் நடைபெற்ற பல நாடகங்கள் சிறிது சிறிதா
Updated on
4 min read

இந்தியக் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரை காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளராகத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னும், பின்னும் திரைமறைவில் நடைபெற்ற பல நாடகங்கள் சிறிது சிறிதாக அம்பலமாகிக்கொண்டிருக்கின்றன.

சென்ற முறை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரதிபா பாட்டீலைத் தேர்ந்தெடுத்ததில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எத்தகைய சிரமமும் இருக்கவில்லை.

இந்திய மக்கள் முற்றிலும் அறியாதவராக அவர் இருந்தபோதிலும் அவரைக் குடியரசுத் தலைவராக ஆக்கி ஐந்தாண்டுகள் அவரும் பதவி வகித்து ஓய்வுபெற்றுவிட்டார். அதைப்போல இந்த முறை ஒருவரைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்க சோனியாவால் முடியவில்லை.

தலையாட்டி பொம்மையாக நிச்சயம் இருக்க மாட்டார் எனத் தெரிந்தும் பிரணாபை வேட்பாளராக்க வேண்டிய கட்டாயம் சோனியா காந்திக்கு இருந்தது. குடியரசுத் துணைத் தலைவராக இருந்த அன்சாரிதான் அவருடைய முதலாவது தேர்வாக இருந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனாலும் காலமும் சூழ்நிலையும் கூட்டணிக் கட்சிகளின் நடவடிக்கைகளும் பிரணாபை வேட்பாளராக அறிவிக்க வேண்டிய அவசியத்தை உள்ளாக்கிவிட்டன.

அரசியலிலும் ஆட்சி நிர்வாகத்திலும் சோனியாவுக்கு அறிவும் அனுபவமும் ஒன்றுமில்லை என்றுதான் கூற வேண்டும். அவருக்கு மட்டுமென்ன, அவருடைய கணவர் ராஜீவ் காந்திக்கே அரசியலும் ஆட்சி நிர்வாகமும் புதிது. அதன் காரணமாக அவரைச் சுற்றியிருந்த அதிகாரிகள், கற்றுக்குட்டி அமைச்சர்கள் ஆகியோரின் பேச்சைக் கேட்டு தவறுக்குமேல் தவறு இழைத்தார். அப்படியிருக்கும்போது இல்லத்தரசியாக இருந்த சோனியாவுக்கு அரசியலிலும் ஆட்சி நிர்வாகத்திலும் எத்தகைய புரிதல் இருக்க முடியும்? எவ்வாறு அவரால் நிர்வாகத்தைச் செம்மையாக நடத்த முடியும்?

ராஜீவ் ஆனாலும் சரி, சோனியா ஆனாலும் சரி தங்களுக்குத் துதிபாடும் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் மட்டுமே நம்பிச் செயல்பட வேண்டிய பரிதாபமான நிலையில் இருந்தனர். குறிப்பாக, நம்பிக்கைக்குரிய அதிகாரிகளின் மூலம் மட்டுமே அவர்கள் செயல்பட வேண்டிய நிலை இருந்தது. ஆனால், அந்த அதிகாரிகள் அரசியல் தொலைநோக்கோ அல்லது சமூகப் பார்வையோ அற்றவர்கள். அவர்கள் கூறிய ஆலோசனைகளின் விளைவு மக்கள் விரோதக் கொள்கைகளைக் கையாண்டு மிகக் குறுகிய காலத்தில் ராஜீவ் காந்தி தனது செல்வாக்கை இழக்க நேரிட்டது. அதே பாதையில் அதுபோன்ற அதிகாரிகளை நம்பி மட்டுமே செயல்படும் சோனியாவின் செல்வாக்கும் வேகமாகச் சரிந்து வருகிறது.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சென்றமுறை பதவி வகித்தபோது பிரதமர் மன்மோகன் சிங் ஓரளவு சுதந்திரமாகச் செயல்பட முடிந்தது. சோனியாவின் தலையீடு அதிகமாக இருக்க முடியவில்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு மட்டுமல்ல, வெளியில் இருந்து இரு கம்யூனிஸ்டுகள் உள்பட இடதுசாரிக் கட்சிகள் அளித்த ஆதரவை நம்பி மன்மோகனின் ஆட்சி இருந்த காரணத்தால் எச்சரிக்கையுடன் செயல்பட்டது. காங்கிரஸ் தேர் தடம்புரண்டுவிடாமல் இடதுசாரிக் கட்சிகள் அவ்வப்போது அதைக் கட்டுப்படுத்தியிருந்தார்கள். இந்தியப் பெருமுதலாளிகளின் விருப்பப்படி தொழிலாளர் சட்டங்களைத் திருத்தவும், ஆயுள் காப்பீட்டுத் துறையிலும் சில்லறை வணிகத்துறையிலும் அன்னிய முதலீடு நுழைய அனுமதிப்பது போன்ற பிரச்னைகளிலும் இடதுசாரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அவற்றுக்குத் தடையாக இருந்த காரணத்தால் அவற்றைச் செய்ய முடியவில்லை.

அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்பட்ட அணு உடன்படிக்கையைக் கண்டித்து இடதுசாரிகள் தமது ஆதரவைத் திரும்பப் பெற்றபோது மன்மோகன் சிங் அரசு கட்டவிழ்த்துவிடப்பட்ட குதிரையானது. அமெரிக்காவுடன் இந்த உடன்பாட்டைச் செய்துகொள்ளாவிட்டால் தான் பதவி விலகுவதாக பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த மிரட்டல் காங்கிரஸ் கட்சியை முழுமையாக ஆதரிக்க வைத்தது. அதே மன்மோகன் சிங் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை, ஏன்?

அணு உடன்பாடு குறித்து அவருக்குப் பச்சைக்கொடி காட்டிய சோனியா காந்தி இலங்கைப் போர் நிறுத்தத்துக்கு சிவப்புக்கொடி காட்டி போரை மேலும் தீவிரப்படுத்தினார்.

அதைப்போல 2004-ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸின் வலிமை கூடியது. அதன் பின்னர் பிரதமரை வெறும் பொம்மையாக்கிவிட்டு சோனியா தன் விருப்பம்போல ஆட்சியைப் பின்னிருந்து இயக்கி வருகிறார்.

பிரதமர் சுதந்திரமாகச் செயல்படும் நிலையில் இல்லை. அவரது ஆலோசகர்களும் அலுவலர்களும் முக்கிய அதிகாரிகளும் பிரதமரைப் புறந்தள்ளிவிட்டு நேரடியாக சோனியாவிடம் பேசி உத்தரவுகளைப் பெற்றுச் செயல்பட்டனர். பிரதமருக்குரிய உண்மையான அதிகாரம் சோனியாவிடம்தான் இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாகும். இந்தக் காலகட்டத்தில்தான் மத்திய அரசில் மிகப்பெரிய ஊழல்களான அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஊழல் போன்றவை அடுக்கடுக்காகத் தொடர்ந்து நடைபெற்றன. அவற்றைத் தடுக்கவோ சம்பந்தப்பட்ட அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கவோ பிரதமர் முன்வரவில்லை. அவருடைய கரங்கள் கட்டிப்போடப்பட்டிருந்தன.

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழலான அலைக்கற்றை ஊழலைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள திமுக அமைச்சர் ராசா போன்றவர்கள் பிரதமரை அவமதித்ததை உச்ச நீதிமன்றம் தலையிட்டுக் கண்டித்த பிறகும்கூட அவர் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் தயங்கிய வேடிக்கையையும் நாம் பார்த்தோம்.

அதைப்போல காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற பெருமளவு ஊழல்களுக்குக் காங்கிரஸ் தலைவரான சுரேஷ் கல்மாடியே காரணம் எனத் தெரிந்தும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

அப்படியானால் இந்த ஊழல் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்காதபடி தடுத்த சக்தி எது? பிரதமரையே மிஞ்சும் அதிகாரத்தைப் படைத்தவர்கள்தான் இதைச் செய்திருக்க முடியும்.

சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற இந்த மிகப்பெரிய ஊழல்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இதுவரை கண்டிக்க முன்வரவில்லை. கல்மாடி போன்ற காங்கிரஸ்காரர்களைக் கட்சியிலிருந்துகூட நீக்கவில்லை. அலைக்கற்றை ஊழலுக்குப் பெரிதும் காரணமான திமுகவுடன் உள்ள உறவைத் துண்டிக்கவும் அவர் தயாராக இல்லை. இதனால் "சந்தேக முள்' அவரை நோக்கியும் திரும்புகிறது.

இதற்கு முன் பிரதமர்களாக இருந்த பலரின் காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அவை குறித்து விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டு, உடனடியாக அதில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதவி விலக்கப்பட்டனர். விசாரணை முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், எந்தப் பிரதமரின் காலத்திலும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஊழல்கள் ஒன்றன்பின் ஒன்றாக மத்திய அமைச்சர்களாலும், காங்கிரஸ் தலைவர்களாலும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களாலும் கூச்சநாச்சமின்றி நடத்தப்பட்டு மக்களின் பணம் சூறையாடப்பட்டபோது, மன்மோகன் சிங், "ஊமையாக' இருக்க வேண்டியிருந்தது. அதற்கான விலையை காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் கொடுக்க வேண்டியிருந்தது.

காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் ஆட்சித் தலைவராக இருந்த பிரதமருக்கும் கட்சித் தலைவராக இருந்தவருக்கும் இடையில் அவ்வப்போது முரண்பாடுகள் எழாமல் இல்லை. ஆனாலும் ஜனநாயக முறையில் அந்த முரண்பாடுகள் தீர்க்கப்பட்டன. கட்சித் தலைவரின் கைதியாக பிரதமர் ஒருபோதும் செயல்பட்டதில்லை. சோனியாவின் காலத்தில்தான் பிரதமர் பதவி கேலிக்கூத்தாக்கப்பட்டிருக்கிறது.

மிகப்பெரிய தலைவரான நேரு பிரதமராக இருந்தபோது 1947-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைவராக இருந்த ஆசார்ய கிருபளானிக்கும், 1950-ல் காங்கிரஸ் தலைவராக இருந்த புருஷோத்தமதாஸ் தாண்டனுக்கும் இடையே முரண்பாடுகள் தோன்றின. ஆனால், கட்சித் தலைமை ஆட்சித் தலைமையை ஆட்டிப்படைக்க நேரு ஒரு போதும் அனுமதிக்கவில்லை. மக்களும் அத்தகைய போக்கை ஊக்குவிக்கவில்லை.

இதன் விளைவாக கிருபளானி, தாண்டன் போன்றவர்கள் பதவி விலக நேர்ந்தது. காங்கிரஸ் தலைவர் பதவியையும் நேருவே ஏற்க வேண்டிய நிலை உருவானது. இதற்குப் பிறகு கட்சித் தலைவரானவர்கள் பிரதமருடன் முரண்படத் துணியவில்லை.

நேரு காலத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி சிதறும், மத்திய அரசில் பதவிப் போட்டிகளால் குழப்பம் ஏற்படும் என்ற நிலையில் அந்த ஆரூடங்களை எல்லாம் பொய்யாக்கிய பெருமை காமராஜரையே சாரும். நேருவுக்குப் பின் இரு பிரதமர்களை ஜனநாயக வழியில் தேர்ந்தெடுத்து, கட்சியிலும், ஆட்சியிலும் ஸ்திரத்தன்மையை அவர் ஏற்படுத்தினார்.

காங்கிரஸ் தலைவராக அவரும் பிரதமராக சாஸ்திரியும் இருந்தபோது, காங்கிரஸ் சின்னம்போல "இரட்டைக் காளை'களாக இணைந்து செயல்பட்டனர். எனவேதான் இரண்டாம் முறையும் காமராஜரே தலைவராக வேண்டும் என சாஸ்திரி விரும்பினார். மற்றவர்களையும் ஏற்க வைத்தார்.

இந்திராவின் காலத்தில் இந்த இணக்கம் ஆரம்பத்தில் இருந்தது. நாளடைவில் காங்கிரஸ் தலைவர், பிரதமருக்கு அடங்கிச் செல்ல வேண்டும் என இந்திரா விரும்பினார். எவ்வாறெல்லாம் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக அவர் செயல்பட்டார் என்பதும் அதன் விளைவாக காங்கிரஸ் இரண்டாக உடைந்தது என்பதும் அனைவரும் அறிந்த வரலாறு.

அதற்குப் பிறகு அவரே கட்சியின் தலைவராகவும் ஆட்சியின் தலைவராகவும் நீடித்தார். இது எதேச்சதிகாரப் போக்காக மாறி இறுதியில் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்வதில்போய் முடிந்தது. அதற்கெதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணன் நடத்திய மக்கள் புரட்சி மாபெரும் பெற்றிபெற்று இந்திராவின் ஆட்சியைத் தூக்கி எறிந்தது.

கடந்த கால இந்த வரலாற்றையெல்லாம் சோனியா காந்தி மறந்துபோய் செயல்படுவதாகத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சியில் நேரடித் தேர்தல் மூலம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சீதாராம் கேசரியை கட்சி விதிகளுக்கு முரணாக நீக்கச்செய்து தலைமைப் பதவியைக் கைப்பற்றினார் சோனியா. இதுவரை முறைப்படி காங்கிரஸ் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்படவும் இல்லை.

அகில இந்திய காங்கிரஸின் நிர்வாகிகளும் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படாமல், சோனியாவால் நியமிக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

மொத்தத்தில் காங்கிரஸ் கட்சி உட்கட்சி ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டது. இந்த அழகில் அவர் பிரதமராகவும் விரும்பினார். ஆனால், சட்டரீதியான சிக்கல்களால் அது தடுக்கப்பட்டது. எனவே, "பொம்மை' பிரதமரை வைத்துக்கொண்டு அதிகார லகானை அவர் கரங்களில் வைத்திருக்கிறார்.

சொந்தக் கட்சியில் உள்ள தலைவர்கள் யாரையும் அவர் மதிப்பதுபோலத் தெரியவில்லை. கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் அவ்வாறே நடத்துகிறார். இதன் விளைவாக சரத்பவார், மம்தா பானர்ஜி போன்ற தலைவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறக்கூடிய சூழ்நிலை உருவாகக்கூடும்.

முலாயம் சிங், மாயாவதி போன்ற மாநிலக்கட்சிகளின் தலைவர்களின் மீதுள்ள சி.பி.ஐ. வழக்குகளைக் காட்டி மிரட்டி காங்கிரûஸ ஆதரிக்க வைத்திருக்கிறார்.

அலைக்கற்றை ஊழலில் சிக்கித் திணறிக்கொண்டிருக்கும் திமுக தன்னை மீறி எப்போதும் செல்லமுடியாத அளவுக்குக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார். முக்கிய கொள்கைகளை வகுப்பதிலும் மற்ற முக்கியப் பிரச்னைகளிலும் கூட்டணிக் கட்சிகளை நம்பிக்கைக்கு எடுத்துக்கொண்டு கலந்தாலோசிப்பது இல்லை.

மெல்ல மெல்ல சர்வாதிகாரப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறார். தனக்குப் பின் தன்னுடைய மகன் ராகுலைப் பதவி நாற்காலியில் அமர்த்துவதற்குத் திட்டமிட்டு அதற்காக காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார். ஆனால், 8 ஆண்டுகாலமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ராகுல் காந்தி ஒரே ஒருமுறைதான் பேசியிருக்கிறார். தனது கட்சியிலும் பிற கட்சிகளிலும் உள்ள முக்கியமானவர்களிடம் அவருக்குத் தொடர்பு என்பது மிகக் குறைவாகும்.

5 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராக இருந்தும், கட்சியின் எதிர்கால வேலைத் திட்டம் குறித்து அவர் எதுவும் பேசியதில்லை. இந்த அழகில் அவரைப் பிரதமராக்குவதற்குத் துதிபாடிகள் இப்போதே புகழ்மாலையைச் சூட்டி வருகிறார்கள். ஆனால், அவர்கள் ஓர் உண்மையை எண்ணிப் பார்க்கவில்லை. 2014-ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால்தான் ராகுல் பிரதமராக முடியும் என்ற உண்மையை அவர்கள் உணரவில்லை.

இந்தி பேசுகிற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மிகமிகப் பலவீனமாக இருக்கிறது. தென்னாட்டில் வலுவாக இருந்த ஆந்திரத்தில் காங்கிரஸ் பிளவுபட்டுவிட்டது.

கர்நாடகத்தில் பாஜக அமைப்புரீதியாக வலுவுடன் உள்ளது. கேரளத்தில் மிக சொற்ப பெரும்பான்மையுடன்தான் காங்கிரஸ் ஆட்சி அமைந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஈழப்பிரச்னைக்குப் பிறகு காங்கிரஸ் தனது செல்வாக்கை அடியோடு இழந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில்தான் ராகுலுக்கு மணிமகுடம் சூட்டத் தயாராகி வருகிறார்கள். இது ஜனநாயக நாடு என்பதையும் மன்னராட்சி நாடல்ல என்பதையும் அவர்கள் மறந்துபோனார்கள்.

வெள்ளையரான ஹியூம் என்பவர் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். அதே வெள்ளை இனத்தைச் சேர்ந்த சோனியாவின் காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மூடுவிழாவை நடத்தினாலும் வியப்படைவதற்கில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com