இன்று காலையில் செய்தித்தாளை திறந்ததுமே கண்ணில் பட்டது அமெரிக்காவில் காணாமல் போன குழந்தை ஷெரின் பற்றிய செய்தி தான். உண்மையில் நடந்தது என்ன என்பதை அறிவதற்கான விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாலும் இதுவரையில் ஊடகங்கள் வழியாக தெரிய வந்த செய்திகளின் அடிப்படையில் சிறுமி காணாமல் போகவில்லை அவளது வளர்ப்புத் தந்தையான வெஸ்லீ மாத்யூஸ் தான் குழந்தையை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இந்த மாதக் துவக்கத்தில் காணாமல் போன அந்தக் குழந்தை பின்பு கிடைத்தது சடலமாகத் தான். இரு தினங்களுக்கு முன்பு அவளது வீடு இருந்த சுற்றுப்புறத்தில் சில மைல் தொலைவிலேயே சடலமாக ஷெரின் மீட்கப்பட்டிருக்கிறாள்.
அந்தச் சடலம் தன் வளர்ப்பு மகளுடையது தான் என ஒப்புக் கொண்ட வெஸ்லி மாத்யூஸ், குழந்தை ஷெரின் பால் அருந்த மறுத்ததால், தான் கட்டாயப்படுத்தி அவளை பால் அருந்த வைத்ததில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அது கடுமையாகி உடலில் அசைவே இன்றி இறந்து விட்டதால், இறந்த சிறுமியின் உடலை அப்புறப்படுத்த நினைத்து வீட்டிலிருந்து சற்றுத்தொலைவில் இருந்த வாய்க்காலில் போட்டு விட்டதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். 3 வயதுப் பிஞ்சுக் குழந்தையை, அது பால் அருந்த மறுக்கிறது என்பதற்காக எந்தத் தந்தையாவது முரட்டுத்தனமாக அருந்த வைக்க முயற்சிப்பாரா? உண்மையில் அது பரிவான தந்தைமைக்கான செயலா? இப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் பிஞ்சுக் குழந்தைகளை தத்தெடுப்பதின் நோக்கம் தான் என்ன?!
வெஸ்லீ காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தின் படி குழந்தை ஷெரின் அவர்களது சொந்த மகளில்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிகாரில் ஷெரினை அவர்கள் தத்தெடுத்திருக்கின்றனர். தத்தெடுக்கும் நல்லெண்ணத்திலோ, அல்லது தத்துக் கொடுக்கும் வழக்கங்களிலோ எந்த ஒரு குறையும் இல்லை. ஆனால் யாருக்கு தத்தெடுக்கக் கூடிய அருகதை உண்டோ அவர்களல்லவா குழந்தைகளைத் தத்தெடுக்க வேண்டும்! வேலைப்பளுவாலோ, பிறவி குணாதிசயங்களாலோ கொஞ்சமும் கருணையற்றுப் போனவர்கள் எல்லாம் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கத் தகுதியானவர்களே இல்லை. அதற்கு அவர்கள் குழந்தைகளற்ற வாழ்வையே சிக்கலின்றி தொடர்ந்து விட்டுப் போனால் யாருக்கும் எந்தவித நஷ்டமுமில்லை. மாறாக, ஒரு குழந்தையை தத்தெடுத்து, ஊரார் முன் நல்லவர்கள் வேடம் போட்டு விட்டு, அந்தக் குழந்தையை இப்படி கண்காணாத தேசத்துக்கு அழைத்துச் சென்று அதன் சிறு சிறு குறும்புத்தனங்களையும், பிடிவாதங்களையும் பொறுத்துக் கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ முயற்சிக்காமல் சகிப்புத் தன்மையே இன்றி கொன்று விட்டு அதை மறைக்க நாடகம் ஆடி இருக்க வேண்டியதில்லை. குழந்தை ஷெரினின் புகைப்படங்களை ஊடகங்களில் காண நேர்ந்த ஒவ்வொருவருக்கும் வெஸ்லீ மாத்யூஸ் குறித்து இப்படித்தான் தோன்றியிருக்கக் கூடும்.
அமெரிக்காவின் ரிச்சர்ட்ஸன் காவல்துறைக்கு இதுவரை வெஸ்லீ அளித்த முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலங்கள் அவரை கொஞ்சமும் மனசாட்சியோ, மனிதாபிமானமோ இல்லாத சுயநலப் பிறவியாகத் தான் அடையாளம் காட்டுகிறது. குழந்தை வளர்ப்பு என்பது அதிலும் தத்துக் குழந்தைகளை பெற்ற குழந்தையாகக் கருதி வளர்த்து ஆளாக்குவது எல்லாம் மனிதாபிமானிகள் செய்ய வேண்டிய செயல். இங்கே வெஸ்லீ மாதிரியான தகுதியற்ற நபர்கள் எளிதாக ஷெரின் போன்ற குழந்தைகளை இந்தியாவில் தத்தெடுக்க முடிகிறது எனில் தவறு நமது சட்டங்களிலும் தான். இம்மாதிரியான இழப்புகளின் போது இந்திய அரசின் தத்தெடுத்தல் மற்றும் தத்துக் கொடுத்தல் சட்டங்களுக்கான விதிமுறைகள் இன்னும் கடுமையாக்கப் பட வேண்டும் என்ற உணர்வே எழுகிறது. அதுமட்டுமல்ல தகுதியற்ற மனிதர்களிடம் தத்துக் கொடுக்கப்படும் இந்தியக் குழந்தைகளின் நிலையைப் பற்றி அறிந்து கொள்ள இந்திய அரசின் குழந்தைகள் நலத்துறை எடுத்தாக வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றியும் இவ்வழக்கு யோசிக்கத் தூண்டுகிறது.
ஷெரின் வழக்கு தொடர்பாக இப்படி கேள்விகள் விரிந்து கொண்டே செல்கின்றன.
முடிவாக குழந்தைகளைத் தத்தெடுக்க நினைக்கும் பெற்றோருக்கு ஒரே ஒரு வேண்டுகோள்... ‘உங்களால் ஒரு குழந்தையை அதன் குழந்தைமையோடு ஏற்றுக் கொண்டு மிகுந்த பொறுமை, சகிப்புத் தன்மை எல்லாவற்றுக்கும் மேலாக பரிவும், அன்புமாக ஒரு குழந்தையை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே கை விடப்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் முடிவை எடுங்கள். உங்களுக்கே உங்களது பொறுமையின் மீதும், சகிப்புத் தன்மையின் மீதும், குழந்தையின் பாலான அர்ப்பணிப்பு உணர்வின் மீதும், மனிதாபிமான உணர்வின் மீதும் நம்பிக்கை இல்லாத பட்சத்தில் பெருமைக்காகவோ, நிர்பந்தத்துக்காகவோ அல்லது இன்னபிற உப்புச் சப்பில்லாத காரணங்களுக்காகவோ எந்தக் குழந்தைகளையும் தத்தெடுக்கிறேன் பேர்வழியென்று எந்த விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு விடாதீர்கள். உங்களுக்கு கோடி புண்ணியங்களாய் போகட்டும்!
Image courtesy: asianet newable.com.
திருமணம் என்ற பெயரில் வளைகுடாக் கிழவருக்கு விற்கப்பட்ட இந்தியச் சிறுமியின் அவலக் கதை!
குழந்தைகளை நேசிப்பவர்கள், கட்டாயம் சாலை விதிகளைப் புறக்கணிக்க மாட்டார்கள்!
மூளைச்சாவு அடைந்த நிலையிலும் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த அதிசயப் பெண்!
பெற்றோரது சீரற்ற நடத்தையால் சிக்கலுக்கு உள்ளாகும், மகள்களின் தாம்பத்ய வாழ்க்கை?