திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. ஆயிரம் காலத்துப் பயிர் என்றெல்லாம் பேசப்பட்ட நிலை மாறி, தனக்குரிய துணையை சட்டென்று பார்த்து, பார்வையால் பேசிக் காதலித்த அதே வேகத்தில் திருமணமும் செய்து கொள்கின்றனர்.
உலகம் முழுவதும் ஒருவருக்கொருவர் தனது அன்பை பரிமாறிக்கொள்ளும் உன்னதமான திருநாளான காதலர் தினம் இன்று. காதல் பல நேரங்களில் விவரிக்க முடியாத ஒரு உணர்வு. சில சமயங்களில் அது மௌன மொழி. ஒருவரின் வாழ்க்கையில் காதல் வெற்றியடைய வேண்டும் என்றால் இந்த கிரகங்கள் மிகவும் முக்கியமானவை என்று ஜோதிட ரீதியாகச் சொல்லப்படுகிறது.
அப்படி யார் அது? என்று நீங்கள் கேட்பது புரிகிறது...
காதலுக்கு முக்கியமானவர்கள்....
காதல் திருமணத்திற்கு குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் மிகவும் முக்கியமானவையாகும். ஐந்து கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவற்றைக் கொண்டுதான் ஒருவரது காதல் வெற்றியடையுமா? தோல்வியடையுமா? என்பதைத் தீர்மானிக்கின்றது.
காதல் திருமணமாக ஜாதகத்தில் சுக்கிரன் பலம் மிகவும் அவசியமாகும். ஒருவர் மீது ஒருவர் அதீதமான அன்புகொள்ள சுக்கிரன் உதவுவார். இனக் கவர்ச்சியும் சுக்கிரனால் உண்டாகும். அன்பு, காதல், பாசம், நேசம், இனிமையான பேச்சு, உல்லாசம், சுகம், மன உற்சாகம் இவை எல்லாவற்றிற்கும் கூட சுக்கிரனே காரகன் ஆவார். எனவே, ஒருவரது ஜாதகத்தில் முக்கிய கிரகங்களின் அதிபதிகள் ஒன்றோடொன்று இணையும் போது காதல் திருமணம் நடைபெறுகிறது.
எந்த கிரகங்கள் இணைந்தால் காதல் திருமணம் நடைபெறும்?
• ஐந்தாம் அதிபதி 7-ல் அல்லது ஏழாம் அதிபதி 5-ல் இருந்தால் காதல் திருமணம் நடைபெறுவது நிச்சயம்.
• ஒன்பதாம் அதிபதி அல்லது குரு கெட்டால், எதிர்ப்புக்கு மீறிக் காதல் திருமணம் நடைபெறும்.
• 1, 5, 7, 9 பாவங்கள் தொடர்பு இருந்தாலும் காதல் திருமணம் நிகழும்.
• ஆண்/பெண் இருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் ஒரே பாகையானால் எதைப்பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் திருமணம் செய்துகொள்வர்.
• 7-ம் அதிபதியும் சுக்கிரனும் சனியினால் பார்க்கப்பட்டால் கட்டாயம் காதல் திருமணம் நடைபெறும்.
• 7-ல் ராகு/கேது சந்திரன், புதன் இருந்தாலும் காதல் திருமணம் தான்.
• பொதுவாக ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், மீனம் ஆகிய ராசிகள் காதல் வயப்படும் ராசிகள் ஆகும்.
• பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்து, நட்சத்திர நாயகன் சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் காதல் திருமணம் நடைபெறும்.
• சுக்கிரன் சுப பலம் பெற்று, களத்திர ஸ்தானாதிபதியாகிய 7-க்கு உரியவன் பலம் பெற்று குரு மறைவு ஸ்தானம் பெற்று, குறிப்பிட்ட தசைபுக்தி நடப்பவர்களுக்கு காதல் திருமணம் நடைபெறும்.
• ஒரு பெண் ஆணிடமோ, ஆண் பெண்ணிடமோ தன் காதலைச் சொல்லத் துணிவு வேண்டுமல்லவா? அந்தத் துணிவை வழங்குபவர் செவ்வாய். இதனால் காதல் திருமணத்துக்குச் செவ்வாயின் பலமும் அவசியம் தேவை.
• மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரக்காரர்கள் இயற்கையாகவே மனத்துணிவு உள்ளவர்கள். இவர்கள் தன் காதலை சொல்ல சற்றும் தயங்கமாட்டார்கள்.
• கன்னியா ராசிக்காரர்களுக்கு ராசியிலேயே கன்னி இருப்பதால் கன்னிப் பெண்களின் நட்பு எளிதாகக் கிடைத்துவிடும். பேச்சு சாதுரியம் இருக்கும் இவர்களுக்கு சுக்கிர பலம் கூடியிருந்தால் இரட்டிப்பு பலம் உண்டாகும்.
• கன்னியா ராசிக்கு 7-ம் இடம் மீனம். களத்திர ஸ்தானம் மீனம் சுக்கிரன் உச்சம் பெறும் வீடாகும். இதனால் கன்னியா ராசியில் பிறந்தவர்களுக்கு காதல் கைகூடும். சுக்கிரனின் எண்ணான 6,15,24 தேதிகளில் பிறந்து, சுக்கிர பலம் இருப்பவர்களுக்கு காதல் திருணமாக அதிக வாய்ப்புள்ளது.
• ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகமாக இருக்கும். விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால் காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள்.
• சுக்கிரன், செவ்வாய் ஆகியோரது பலம் பெற்றவர்கள் காதல் திருமணம் செய்துகொண்டால் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.