/

பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு கலசலிங்கம் பல்கலை.யில் இலவச பி.டெக். படிப்பு

வரும் பிளஸ் 2 தேர்வில், மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப் படிப்பு படிக்க கல்விக் கட்டணம் முழுவதும் இல்லை என்றும்,

News image
Updated On :25 நவம்பர் 2012, 12:48 pm

கோ.ஜெயக்குமார்

வரும் பிளஸ் 2 தேர்வில், மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப் படிப்பு படிக்க கல்விக் கட்டணம் முழுவதும் இல்லை என்றும், இரண்டாம் இடம் பெறும் மாணவருக்கு 50 சதவீத கல்விக் கட்டணமும், மூன்றாம் இடம் பெறும் மாணவர்க்கு 25 சதவீதமும் கல்விக் கட்டண சலுகையும் வழங்கப்படும் என்று வேந்தர் க.ஸ்ரீதரன் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை, பல்கலைக்கழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள், அரசு பொதுத் தேர்வை தைரியமாக எதிர்கொண்டு, கூடுதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவதற்கான ஆலோசனை வழங்குவதற்கான ஜெயிப்பது எப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை தலைமையேற்று, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசுகையில் வேந்தர் க.ஸ்ரீதரன் இவ்வாறு கூறினார்.

நிகழ்ச்சியில் துணை வேந்தர் பி.கன்னியப்பன் முன்னிலை வகித்து பேசுகையில் கூறியதாவது: இன்னும் மூன்று மாதங்களே அரசு பொதுத் தேர்வுக்கு உள்ளது. முழு முயற்சி எடுத்து, உடல் நலத்தையும் பார்த்து படித்தால் வெற்றி உறுதி. கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேரும் அனைவருக்கும், பல்கலைக்கழகம் சார்பில் கல்விக் கடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது என்றார் அவர்.

பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக பட்டிமன்றப் பேச்சாளர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில் கூறியதாவது: தேர்வில் வெற்றி பெற்றார்ல் தான் மதிப்பு அதிகம். கஷ்டப்படாமல் யாரும் ஜெயிக்க இயலாது. ஐம்புலன்கள்தான் செல்வம். அதில் காதில் கேட்கும் செல்வம் அழியாது. எது நமக்கு வரவில்லையோ, அதை விடாதே. அதை அடைய முயற்சி செய். எழுத்து, பேச்சு, படிப்பு, விளையாட்டு, நடனம் எதுவானாலும் சரி. நான் 8-ம் வகுப்பில் பேச்சுப் போட்டியில் தோல்வியடைந்தேன். அதிலேயே பயிற்சி எடுத்து இன்று பட்டிமன்றதப் பேச்சாளராக உயர்ந்துள்ளேன். வீடு வீடாக செய்தித்தாள் போட்ட டாக்டர் அப்துல்கலாமை, இன்று அனைத்து பத்திரிக்கைகளிலும் போடுகிறார்கள். அந்த அளவிற்கு அவர் விடா முயற்சியுடன் உழைத்து உயர்ந்துள்ளார் என்றார் அவர்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பா.பகவதி பேசுகையில், விருதுநகர் மாவட்டம் கல்வியில் முதன்மையானது. அந்த முதல் இடத்தை நாம் தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் பிளஸ் 2 பாடத்தில் அனுபவமிக்க ஆசிரியர்கள் தங்களது பாடங்களில் எவ்வாறு கூடுதல் மதிப்பெண்கள் பெற்று மாணவர்கள் வெற்றி பெறுவது என்பது குறித்து கருத்துரையாற்றினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்கள் ச.வைகுண்ட பெருமாள், க.ஜெயக்கண்ணு, ம.முத்துமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பல்கலைக்கழகம் சார்பில் இலவச பஸ் வசதி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக ஆட்டோமொபைல் பொறியியல் துறைத் தலைவர் டாக்டர் பி.ஜி.குருசாமிபாண்டியன், பேராசிரியர்கள் முத்துக்கண்ணன், தேவதாஸ், சிறப்பு அலுவலர் லட்சுமணன், நிதி காப்பாளர் இளமாறன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

மாணவர் சேர்க்கைப் பிரிவு இயக்குநர் பேராசிரியர் சு.கண்ணன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.