குரூப் 4 தொகுதியில் காலியாகவுள்ள 7 ஆயிரத்து 382 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை (ஏப்.28) கடைசி நாளாகும்.
இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 தொகுதியின் கீழ் 7 ஆயிரத்து 382 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி வெளியிட்டது. மார்ச் 30 ஆம் தேதி முதல் இணைய வழியாக (www.tnpsc.gov.in) தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர்.
எழுத்துத் தேர்வானது ஜூலை 24 ஆம் நடைபெறுகிறது.
இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வியாழக்கிழமை (ஏப். 28) ஆகும். இதுவரை 17.80 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.