காவித் துண்டு அணிபவர்கள் போலீஸாரைத் தாக்குவதற்கு உரிமம் பெற்றிருக்கிறார்களா என்று உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார்.
உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னௌவில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: காவித் துண்டு அணிபவர்கள் போலீஸாரைத் தாக்குவதற்கு உரிமம் பெற்றிருப்பதுபோல் தெரிகிறது. கன்னௌஜ் காவல் நிலையத்திலும், ஆக்ராவில் அண்மையில் நடைபெற்ற மோதலிலும் போலீஸாருக்கு எதிராக காவித் துண்டு அணிந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.
காவலர்களைத் தாக்குவதற்கு அவர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. சட்டம், ஒழுங்கு விவகாரம் சரியில்லை என்று எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது குற்றம்சாட்டப்பட்டது. தற்போது, அலாகாபாத் நகரில் இளம் தம்பதியும், அவர்களது 2 மகள்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றார் அவர்.