அமர்நாத் தாக்குதல்: முக்கிய குற்றவாளிகள் கைது
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள், கடந்த 10 ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில், சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக அம்மாநில போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு-காஷ்மீர் மாநில ஐஜிபி முனீர் அகமது, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த 4 லஷ்கர் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டது காஷ்மீர் போலீஸ் மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவின் (எஸ்ஐடி) கடின உழைப்பிற்கு பிறகு தெரியவந்துள்ளதாக கூறினார்.
மேலும், அவர்களுக்கு தளவாடங்கள், வழிகாட்டுதல் உள்ளிட்ட உதவிகளை வழங்கிய முக்கிய குற்றவாளிகளான கடைக்காரர் பிலால் ரிஷி, மருந்து விற்பனை பிரதிநிதி அஜீஸ் அகமது, எஸ்ஆர்டிசி ஓட்டுநர் ஜஹூர் அகமது ஷேக் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யபட்டுள்ளதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக முனீர் அகமது தெரிவித்தார்.