நீதிமன்றங்களில் வழக்காடுவதிலிருந்து விலகிக்கொள்வதாகத் தெரிவித்த மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான், அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ஆஜராக உள்ளார் என்று அந்த வழக்கில் சில முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜாராகிவரும் வழக்குரைஞர் எஜாஸ் மக்பூல் தெரிவித்தார்.
தில்லி அரசு - தில்லி துணைநிலை ஆளுநர் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் வழக்கில் தில்லி அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ராஜீவ் தவான் ஆஜரானார். அப்போது, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் அவர் காரசார விவாதத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து, அவர் தீபக் மிஸ்ராவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், 'தில்லி அரசு சார்பில் நான் ஆஜரான வழக்கில் மனம் புண்பட்டுவிட்டது. நீதிமன்றங்களில் வழக்காடுவதிலிருந்து விலகிக்கொள்ள விரும்புகிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் அவர் மீண்டும் ஆஜராகவுள்ளார் என்று எஜாஸ் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், 'பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ஆஜராகுமாறு தவானிடம் வேண்டுகோள் விடுத்தோம். அதை அவர் ஏற்றுக்கொண்டார். நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அவர் மீண்டும் கடிதம் எழுதி நிலுவையில் உள்ள வழக்குகளில் ஆஜராவார்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.