

பாஜகவாலும், காங்கிரஸ் கட்சியாலும் அரசியல்சாசனத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் விழாவில் பேசிய அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 'நாட்டின் அடித்தளமான அரசியல்சாசனத்துக்கு பாஜகவால் அச்சுறுத்தலும், பாதிப்பும் ஏற்பட்டுள்ளது' என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலடி தரும் வகையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசியல்சாசனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியது பாஜக மட்டுமல்ல; அதில் காங்கிரஸுக்கும் சரிசமமான பொறுப்பு உள்ளது. அக்கட்சியும் அதைத்தான் செய்தது. அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்ட அரசியல்சாசனம் இன்று தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. மக்களின் நலவாழ்வை உறுதிப்படுத்த அரசியல்சாசனத்தை அமல்படுத்துவதில் காங்கிரஸும் தவறிவிட்டது. தன்னால் அரசியல்சாசனத்துக்கு அச்சுறுத்தல் என்பதை பாஜக மறுக்கக் கூடும். ஆனால் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் என்பது எப்போதுமே அரசியல்சாசனத்துக்கு எதிராக இருந்து வந்துள்ளது அனைவருக்கும் தெரியும். அவர்கள் அரசியல்சாசனத்தின் பெயரில் பதவிப்பிரமாணம் எடுத்தே ஆட்சிக்கு வந்துள்ளனர்.
ஆனால் பாஜகவினர் தங்களது அடிப்படைவாத, ஜாதியவாத சிந்தனனையை அமல்படுத்துவதில் எந்த முயற்சியையும் விட்டு வைப்பதில்லை. அதனால்தான் அனைத்து அரசியல்சாசன அமைப்புகளும் இன்று அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன.
பாஜகவின் அரசியல்சாசன விரோத சிந்தனையை எதிர்த்துப் போரிட காங்கிரஸுக்கு தார்மிக உரிமை எப்படி இருக்கும்? என்று அந்த அறிக்கையில் மாயாவதி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.