

புது தில்லி: தென்னிந்தியாவில் எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, புற்றுநோயை விட அதிகமானோரின் மரணத்துக்குக் காரணமாக தற்கொலை இருப்பதாக பல்வேறு சுகாதார ஆராய்ச்சி அமைப்புகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சம் இணைந்து தயாரித்து வெளியிட்ட புள்ளி விவரத்தில், தமிழ்நாடு உள்ளிட்ட 3 தென்னிந்திய மாநிலங்களிலும், மேற்கு வங்கத்திலும் 15-39 வயதுக்குட்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்வது 3 மடங்கு அதிகமாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 15-39 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்தைக் கணக்கிட்டதில், 25% மரணம் தற்கொலை அல்லது வன்முறையால் நிகழ்வதாகவும், இது கேரளாவில் 24.4% ஆக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
அதே சமயம், பிகாரில் இது 6.8%ஆகவும், நாகாலாந்தில் 7.7%ஆகவும் இருக்கிறது.
இது குறித்து மனநல மருத்துவரும், ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் பேராசிரியருமான விக்ரம் படேல் கூறுகையில், மரணத்துக்கு அதிகக் காரணமாக தற்கொலைகள் இருப்பதாக இந்த புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால், வளர்ந்து வரும் மருத்துவ சிகிச்சைகளினால் இந்த மாநிலங்களில் குழந்தைகளைத்தாக்கும் மிகப் பயங்கர நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதும், தொற்று நோய்களும் பரவாமல் தடுக்கப்பட்டிருப்பதால், இந்த காரணிகளால் நிகழும் மரணங்கள் குறைந்திருக்கின்றன. இதுவே தற்கொலையால் மரணங்கள் அதிகமாக நிகழ்வதாக புள்ளி விவரம் தெரிவிக்கக் காரணமாகிறது.
இரண்டாவது காரணம், படித்து, பல்வேறு கனவுகளோடு வரும் இளைஞர்களுக்கும், சமூகத்தில் நிலவும் சில முரண்பாடுகளுக்கும் இடையே மோதல் நிகழும் போதும், இளைஞர்கள் பலர் மன அழுத்தத்துக்கு உள்ளாவதும் தற்கொலைகள் அதிகரிக்கக் காரணமாக இருக்கின்றன.
மேற்கு வங்கமும் இந்த பட்டியலில் இணைந்திருப்பதுதான் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.