

புதுதில்லி: இந்திய ராணுவத்தை விட ஆர்எஸ்எஸ் சிறந்த அமைப்பு என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் பேச்சு மிகுந்த சர்ச்சையினை உண்டாக்கியுள்ளது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிகார் மாநிலத்தில் 10 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக., ஞாயிறன்று முசாபர்பூர் என்னும் நகரத்தில் உள்ள பள்ளி மைதானம் ஒன்றில் கூடியிருந்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
இப்பொழுது நாட்டில் ஒரு போர் வந்தால் நாட்டுக்காகப் போராடும் ஒரு படையினை உருவாக்கிட இந்திய ராணுவத்திற்கு 6 முதல் 7 மாதங்கள் வரையாவது ஆகும். ஆனால் முறையாக பயிற்சி பெற்ற, ஒழுக்கம் நிரம்பிய ஆர்எஸ்எஸ் அமைப்பால் மூன்று நாட்களில் இது முடியும். அதுதான் நமது திறமை.
ஆர்எஸ்எஸ் ஒரு ராணுவ அமைப்பல்ல; ஆனால் நாம் அவர்கள் அளவுக்கு ஒழுக்கம் நிரம்பியவர்கள். இது போல ஒரு நிலைமை ஏற்பட்டால், நமது அரசியல் சட்டம் அனுமதித்தால் நாட்டுக்காக களத்தில் நின்று போராட ஸ்வயம்சேவக்குகள் தயாராக இருக்கின்றனர்.
இவ்வாறு மோகன் பாகவத் பேசினார். அவரின் இந்த பேச்சு கடும் சர்ச்சையினைக் கிளப்பியுள்ளது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இரு கட்சிகளுமே, 'நாட்டுக்காக ராணுவ வீரர்கள் தொடர்ந்து உயிர் இழந்து வரும் இந்த சூழ்நிலையில், அவர்களை அவமானப்படுத்தும் இந்தப் பேச்சு கண்டிக்கத்தக்கது' என்று தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் அவரது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு விளக்க அறிக்கை கொடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.