வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தில்லி உள்பட பிற மாநிலங்களில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தில்லி பொறுப்பாளர் கோபால் ராய் கூறியதாவது: கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட விரும்பினோம். ஆனால், கூட்டணி சாத்தியப்படவில்லை. நாங்கள் கூட்டணி அமைக்க எடுத்த முயற்சிகளை மக்கள் விரும்பவில்லை. தில்லியில் ஆட்சியில் இருந்தும் கடந்த மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியால் ஏன் ஓர் இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை என்பது தொடர்பாக ஆய்வு செய்தோம். அப்போது, நாங்கள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதை மக்கள் விரும்பவில்லை என்பது தெளிவாகியுள்ளது. இதனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தில்லி உள்பட ஆம் ஆத்மி போட்டியிடவுள்ள எந்த மாநிலத்திலும் கூட்டணி அமைக்கப்படாது. மேலும், ஆம் ஆத்மி கட்சியை பூத் அளவில் வளர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம் என்றார் அவர்.