ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுப்பு: உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தில்லி உயர் நீதிமன்றத்தால் முன்ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ளார்


புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தில்லி உயர் நீதிமன்றத்தால் முன்ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றது. இந்த நிதியைப் பெறுவதற்காக, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதைத் தொடர்ந்து, கருப்புப் பண மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யாமல் இருப்பதற்கு முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம், தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி சுனில் கெளர், கடந்த ஜனவரி மாதம் 25-ஆம் தேதி, மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். அந்த மனு மீது இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
முன்னதாக, இந்த மனு மீதான விசாரணையின்போது, ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க அமலாக்கத் துறையும், சிபிஐயும் எதிர்ப்பு தெரிவித்தன. அவரிடம் விசாரணை நடத்தியபோது கேள்விகளுக்கு சரிவர பதிலளிக்காததால், அவரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும் இரு விசாரணை அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன.
முன்னதாக ப.சிதம்பரத்தைக் கைது செய்வதற்கு தில்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததோடு, அவகாசம் அவ்வப்போது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தில்லி உயர்நீதிமன்றம் திங்களன்று பரபரப்புத் தீர்ப்பை அளித்துள்ளது.
இந்நிலையில் தில்லி உயர் நீதிமன்றத்தால் முன்ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ளார்.
அவசர வழக்காக கருதி விசாரிக்குமாறு சிதம்பரம் தரப்பு விடுத்த கோரிக்கையினை அடுத்து இந்த வழக்கானது புதன் காலை விசாரிக்கப்படும் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...