தில்லி தீ விபத்தில் உயிரிழந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
தில்லி ஜான்சி ராணி வணிகப் பகுதியில் அமைந்துள்ள அனாஜ் மண்டி எனும் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மின்கசிவுக் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்காலம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, தில்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய அரசும், தில்லி அரசும் நிதியுதவி அறிவித்துள்ள நிலையில், தீ விபத்தில் உயிரிழந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
மேலும், பிகார் மாநில அமைச்சர் சஞ்சய் ஜா இதுகுறித்து கூறுகையில், 'விபத்து நடந்த இடத்திற்கு சென்று பாருங்கள். மின்கம்பிகள் பல அறுந்து கிடக்கின்றன. இந்த விபத்தில் உயிரிழந்த பலர் பூர்வாஞ்சல் மற்றும் பிகார் பகுதியைச் சேர்ந்தவர்கள். அதுபோன்று மதுபனி மற்றும் தர்பங்காவைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். இதற்கு முழுக்க முழுக்க மின்துறையின் அலட்சியமே காரணம்' என்று குறிப்பிட்டுள்ளார்.