லக்னௌ: உத்தரபிரதேசத்தில் ரூ.128 கோடி மின்சார கட்டணம் செலுத்தும்படி முதியவர் ஒருவருக்கு பில் வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள சாம்ரி கிராமத்தில் வசித்து வருபவர் ஷமீம். சமீபத்தில் இவர் வீட்டுக்கு மாதாந்திர மின்சார கட்டண பில் வந்துள்ளது. அதில் அவர் ரூ.128 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 444 மின் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்ட ஷமீம் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
அவர் மின்சார கட்டணம் செலுத்தாதால் வீட்டுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இதுகுறித்துஅவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாங்கள் எங்கள் வீட்டில் மின் விசிறி மற்றும் குழல் விளக்கு பயன்படுத்துகிறோம். பின் எப்படி எங்களுக்கு இவ்வளவு பெரிய தொகை வர முடியும்? நாங்கள் இந்த தொகையை எப்படி செலுத்த முடியும்? சராசரியாக ஒரு மாதத்திற்கு எனக்கு ரூ.700 அல்லது ரூ.800 வரை மின் கட்டணம் செலுத்த வேண்டி வரும். எனது வேண்டுகோளை ஒருவரும் கேட்கவில்லை. ஒரு முழு நகரத்துக்கான கட்டணம் கட்டும்படி மின் வாரியம் இந்த பில்லை எனக்கு அனுப்பியுள்ளது.
முன்னதாக கடந்த வருடம் மே மாதத்தில் உ.பியில் காய்கறி கடை வைத்திருக்கும் ஜெகன்னாத் என்பவருக்கு ரூ.8.64 லட்சம் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என பில் வந்தது. இதுதொடர்பாக அவர் மின் வாரியத்திற்கு பலமுறை அலைந்து திரிந்தும் பலனில்லாத நிலையில், மனஉளைச்சலுக்கு உள்ளாகி, தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இது பில்லில் தசம புள்ளி விடுபட்டு போனதில் நடந்த தவறு என்று கூறிய மின்வாரியம் வேலையை சரியாகச் செய்யாத கணக்கு உதவியாளர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்து, தனது கடமையை முடித்துக் கொண்டது .