புது தில்லி: நாட்டில் கடந்த 33 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பருவ மழை 25% கூடுதலாக பெய்ததால் பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்த மாதத்தில் பெய்ய வேண்டிய பருவமழையைவிட 25% கூடுதலாக பெய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 1983-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பருவமழையானது 23.8% கூடுதலாக பெய்ததே இதுவரை அதிகபட்ச மழையளவாக இருந்த நிலையில், அந்த வரலாறு தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதற்கு முன்பு, 1976-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பருவமழையானது 28.4% கூடுதலாக பெய்துள்ளது.
இந்த ஆண்டு பிகார், ஆந்திரம், தெலங்கானா, தமிழ்நாடு, குஜராத், கோவாவில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. சிக்கிமில் மிக அதிகளவில் மழை பெய்துள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல மாநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
கடந்த ஆண்டைக் காட்டிலும் நாடு முழுவதும் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் சேமிக்கப்பட்டுள்ள நீரின் அளவானது இந்த ஆண்டு சிறப்பாக உள்ளதகாவும் மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.
அதுபோலவே கடந்த ஜூன் மாதத்தில் 17% கூடுதல் மழையும், ஜூலை மாதத்தில் 10% கூடுதல் மழையும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.