பிரபல சீன சமூக செயலியான 'வீ சாட்' லடாக் எல்லைப் பிரச்னை குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துகளையும், இந்தியாவின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளையும் நீக்கியுள்ளது.
லடாக் எல்லையில் இந்திய - சீனப் படைகள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலில் சீனத் தரப்பில் இருந்தும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது. இரு நாடுகளுக்கு இடையிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையிலும், லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், சீனாவில் உருவாக்கப்பட்ட செயலியான 'வீ சாட்' -இல் சீனத் தாக்குதலுக்கு பிறகு இந்தியா குறித்த எந்த தகவல்களும் பகிரப்படவில்லை. லடாக் பிரச்னை குறித்த பிரதமர் மோடியின் பேச்சு, இந்தியாவின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் என அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள தகவல்களும் நீக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறியதன் காரணமாக இந்த தகவலை பார்க்க முடியாது என செயலியில் காரணம் காண்பிக்கப்படுகிறது.
2015 ஆம் ஆண்டில் பிரதமர் மோடியின் சீனப் பயணத்திற்குப் பின்னர் ட்விட்டர் தளத்தைப் போன்று 'சைனா வெய்போ' ( Sina Weibo) என்ற கணக்கை தொடங்கி வைத்தார். அதிலும், இந்திய - சீன மோதல் குறித்து எந்த கருத்துகளும் பகிரப்படவில்லை.