இன்னும் பொருளாதார நடவடிக்கைக் குழுவை அமைக்காதது அதிர்ச்சியளிக்கிறது: ப. சிதம்பரம்
கரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய்வது குறித்து பொருளாதார நடவடிக்கைக் குழு அமைக்கப்படாதது குறித்து ப. சிதம்பரம் மத்திய அரசை விமரிசித்துள்ளார்.
இந்தியாவை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியப் பொருளாதாரம் சரிவைச் சந்திக்கும் என்பதால், சில துறைகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரண உதவிகளை அளிப்பது தொடர்பான முடிவுகளை எடுக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த வியாழக்கிழமை அறிவித்தார்.
இந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது சுட்டுரைப் பதிவில் இதுதொடர்பாக குறிப்பிடுகையில்,
"பிரதமர் வாக்குறுதி அளித்து 4 நாட்கள் ஆகியும் மத்திய அரசு இன்னும் பொருளாதார நடவடிக்கைக் குழுவை அமைக்காதது அதிர்ச்சியளிக்கிறது. நிதியமைச்சர் ஏன் இதுகுறித்து பிரதமர் மோடியுடன் பேசவில்லை? இந்த நடவடிக்கைக் குழு அமைப்பதற்கானப் பொறுப்பை ஏற்க நிதியமைச்சகம் மறுத்துவிட்டது" என்றார்.