வங்கக் கடலில் மையம் கொண்டிருக்கும் உம்பன் புயலானது இன்னும் ஒரு சில மணி நேரங்களில் கரையைக் கடக்கவிருக்கும் நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.
சூப்பர் புயல் என்று அழைக்கப்படும் உம்பன் புயலானது இன்று முற்பகல் 11.30 மணி நிலவரப்படி மேற்கு வங்க மாநிலம் திகாவில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 124 கி.மீ. தொலைவில் உள்ளது.
உம்பன் புயல் மேற்கு வங்கம் - வங்கதேசம் கடற்கரைக்கு இடையே இன்று பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் கடந்த சில மணி நேரமாக சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. பாராதீப் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 102 கி.மீ. வேகத்தில் வீசி வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.