/

'நாட்டின் பாதுகாப்பை விட முக்கியமானது எதுவும் இல்லை'

நாட்டின் பாதுகாப்பை விட முக்கியமானது எதுவும் இல்லை என்று அடல் சுரங்கப்பாதை திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News image
அடல் சுரங்கப்பாதையை திறந்துவைத்து பிரதமர் மோடி உரை
Updated On :3 அக்டோபர் 2020, 6:57 am

DIN

நாட்டின் பாதுகாப்பை விட முக்கியமானது எதுவும் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இமாசலில் ரோதங் பகுதியில் மிக உயரமான பகுதியில், மணாலி - லாஹல் ஸ்பிதி பள்ளத்தாக்கை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான அடல் சுரங்கப்பாதையை திறந்துவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், ''அடல் சுரங்கப்பாதை மூலம் எல்லைப் பகுதி உள்கட்டமைப்பின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை மூலம் எல்லைப் பாதுகாப்பில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும். 

சர்வதேச எல்லைப் பிணைப்பிற்கு அடல் சுரங்கப்பாதை உலக நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. உள்கட்டமைப்பு திட்டம் மற்றும் பணிகளில் ஏற்படும் தாமதம் நாட்டின் பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்கிறது.     

கடந்த காங்கிரஸ்  அரசு சுரங்கப்பாதை பணியை துரிதப்படுத்தாததால், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை நாங்கள் விரைவுபடுத்தினோம். கடந்த 2002-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர்  வாஜ்பாய் சுரங்கப்பாதைக்காக அடிக்கல் நாட்டினார். 

காங்கிரஸ்  ஆட்சியில் 2013-14-ஆம் ஆண்டு வரை 1,300 மீட்டர் வரையிலான பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டிருந்தன. பின்னர் வந்த பாஜக ஆட்சி இப்பணிகளை துரிதப்படுத்தி சுரங்கப்பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு தற்போது கொண்டுவந்துள்ளது. 

நாட்டின் பாதுகாப்பு நலன்கள் காங்கிரஸ் ஆட்சியில் சமரசம் செய்யப்பட்டன. ஆனால் பாஜகவிற்கு நாட்டின் நலனை விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை'' என்று பிரதமர் மோடி பேசினார்.

''நாட்டின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள் அடல் சுரங்கப்பாதையை தங்களது ஆராய்ச்சி சார்ந்த பணிகளுக்கான பாடமான பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்துமாறு உயர்கல்வித்துறையை கேட்டுக்கொள்கிறேன். அடல் சுரங்கப்பாதை கட்டுமானம் குறித்து துறை சார்ந்த மாணவர்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்'' என்றும் பிரதமர் மோடி மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.