உ.பி.யில் வரதட்சிணைக் கொடுமை: உயிருடன் எரிக்கப்பட்ட பெண் பலி
உத்தரப்பிரதேசத்தில் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தப்பட்ட இளம்பெண் உயிருடன் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜஸ்ரத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சதிபால். இவர் தனது மகளை கடந்த ஆண்டு பாதாபூர் கிராமத்தில் வசிக்கும் சுதேஷ் சிங் என்பவருக்கு திருமணம் செய்துகொடுத்துள்ளார். திருமணத்தின்போது வரதட்சிணையாக குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொண்ட சுதேஷ் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் அதன்பின் அடிக்கடி இளம்பெண்ணிடம் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது.
அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற இளம்பெண்ணை சுதேஷ் சிங் மற்றும் குடும்பத்தினர் தாக்கி தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அப்பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அப்பெண் பலியானார்.
அவர் இறப்பதற்கு முன் மேற்கொண்ட விசாரணையில் சுதேஷ் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சிணை கேட்டு அப்பெண்ணை தீயிட்டு எரித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பலியான இளம்பெண்ணின் தந்தை சதிபால் அளித்த எழுத்துப்பூர்வ புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான 6 பேரையும் தேடி வருகின்றனர்.