பண்டிகை காலத்தில் கரோனா தடுப்பில் கூடுதல் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
"மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்பட அனைவரும் பாடுபட்டு வருவதால், கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா நமக்கு வராது என்று எண்ண வேண்டாம். பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
கரோனா பாதிப்பு குறைந்து வருவதைப் பார்த்து மக்கள் எவ்வித அச்சமுமின்றி முகக் கவசம் இல்லாமல் சாதாரணமாக வெளியே வருவது தெரிகிறது. இதனால், உங்களுக்கும் உங்களது குடும்பத்தில் உள்ள பெரியவர்களுக்கும்தான் கடினமான சூழலை ஏற்படுத்துகிறீர்கள். கரோனா இன்னும் முழுமையாக நீங்கவில்லை.
அமெரிக்கா, ஐரோப்பாவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதனால், வெளியே செல்லும்போது 2 அடி சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல், கை கழுவுதல் உள்ளிட்டவற்றைப் பின்பற்ற வேண்டும்.
உடலில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால், அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவர்களை அணுக வேண்டும்.
நவராத்திரி, தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் கரோனா தடுப்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்."