யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
அதில், தேர்வர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணியாத தேர்வர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மாணவர்கள் அவர்களுக்கு என்று கிருமிநாசினி திரவத்தை பாட்டில்களில் கொண்டு வர அனுமதிக்கப்படுவர்.
தனிமனித இடைவெளி மற்றும் தனிமனித சுகாதாரம் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2020-21ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு மே 31 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், பொது முடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கியத் தேர்வுகளை நடத்தும் பணி தொடங்கியுள்ளது.
இதற்கான நுழைவுச் சீட்டை தேர்வர்கள் https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தேர்வாணையம் தரப்பில் நுழைவுச் சீட்டு அளிக்கப்படாது என்றும், தேர்வர்களே எடுத்து வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு 2021 ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.