விவசாயிகளிடம் இருந்து அவர்கள் உற்பத்தி செய்த வேளாண் பொருட்களை நேரடிக் கொள்முதல் செய்யும் வகையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளில், வேளாண் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களுக்கும், கொள்முதல் செய்யப்படும் இடங்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியைக் குறைத்து, வேளாண் பொருட்களை நேரடிக் கொள்முதல் செய்யும் வகையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம்.
குறுகிய கால பயிர் சாகுபடியை ஊக்குவிக்க கவனம் செலுத்தும் அதே நேரத்தில், வேளாண் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நீண்ட கால திட்டங்களிலும் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.
கொள்முதல் நிலைய உள்கட்டமைப்பை உருவாக்குதல், குளிர்பதனக் கிடங்கு அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது.
இந்த நிதி உடனடியாக விடுவிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.