பெகாஸஸ் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், பாஜக கூட்டணி கட்சிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், அரசின் உயர் அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் பெகாஸஸ் மென்பொருள் மூலம் வேவு பார்ப்பதற்கான இலக்கில் இருந்ததாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை கிளப்பியது.
இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கிவருகின்றனர். உளவு மென்பொருள் மூலம் வேவு பார்க்கப்பட்டார்களா? என்பது குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்க அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இதில் விசாரணை நடத்த வேண்டும் என பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, மற்றொரு கூட்டணி கட்சியான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவும் இதே கோரிக்கையை விடுத்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை நேற்று சந்தித்து பேசிய இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி, "இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தால், பெகாஸஸ் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். யார் வேவு பார்த்தார்கள் உள்பட உண்மைகளை கண்டறிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.