அசாமில் ரயில் மோதியதில் இரண்டு யானைகள் பலியானதாக வடகிழக்கு ரயில்வே மூத்த அதிகாரி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வடகிழக்கு ரயில்வே அதிகாரி கூறுகையில்,
மோரிகான் மாவட்டத்தின் ஜாகிரோடு அருகே திப்ருகார் நோக்கி சென்ற ராஜ்தானி விரைவு ரயில் நேற்று இரவு 10 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலின் இன்ஜின் பகுதி மோதியதில் இரண்டு யானைகள் பலியானது.
மேலும், இந்த சம்பத்தால் ரயில் போக்குவரத்து ஏதும் பாதிக்கப்படவில்லை என்றார்.
விபத்து குறித்து ரயில் ஓட்டுநரின் முதல்கட்ட அறிக்கையின்படி, “ரயிலின் இன்ஜின் பகுதி மோதியதில் இரண்டு யானைகள் விபத்துக்குள்ளானது. அதில் ஒரு யானை சம்பவ இடத்திலேயே பலியானது, மற்றொன்று பலத்த காயமடைந்திருந்தது. பின்னர் இரண்டு யானைகளும் உயிரிழந்தது தெரியவந்தது.”
வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமுள்ள வனப்பகுதிகளுக்கு நடுவே செல்லும் ரயில்களால் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அதிர்ச்சியடைய வைக்கின்றது. இதுபோன்ற விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.