புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 37 ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தில்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வரும் சூழ்நிலையிலும் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இதுவரை மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையே புதன்கிழமை தொடர்ந்து 6 ஆவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு உறுதி செய்ய வேண்டும், வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என தங்கள் கோரிக்கையை வலுவாக முன்வைத்துள்ளனர்.
வருகிற ஜனவரி 4 ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனில் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம் என்று கிசான் மஸ்தூர் சன்ஹர்ஷ் கமிட்டி உறுப்பினர் சுக்விந்தர் சிங் தெரிவித்தார்.
எங்களிடம் 6 மாதங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் உள்ளன. சுற்றுச்சூழல் மற்றும் மின்சார சட்டம் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்தால் நாங்கள் போராட்டத்திலிருந்து பின்வாங்குவோம் என்று அரசு நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது' என்று தெரிவித்தார்.