நடைபெற உள்ள தேர்தலைக் காரணமாகக் கொண்டே மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் அமைந்துள்ளது. ஆட்சி அமைத்த பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மத்திய அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது.
இந்த அமைச்சரவையில் பட்டியல் வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு பெரும்பான்மையாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மல்லிகார்ஜுன் கார்கே கருத்து தெரிவித்துள்ளார்.
“நிறைய பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தலை மனதில் கொண்டே இதனை மத்திய அரசு செய்துள்ளது. இது மக்களை திசைதிருப்பும் முயற்சி. இவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்தவகையிலும் நன்மையை செய்துவிடப் போவதில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.