பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை: தில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லியில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக துணை காவல் ஆணையர் அனிதா ராய் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி, பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் பயங்கரவாத அமைப்பால் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியுள்தாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, தில்லி காவல்துறை மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தில்லி காவல் துணை ஆணையர் அனிதா ராய் கூறியதாவது,
டிரோன் தாக்குதலுக்கு எதிராக செயல்படும் முறை குறித்து காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு படை, இந்திய விமானப் படை, டிஆர்டிஓவுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். சுதந்திர தினத்தன்று அனைத்து கோணங்களிலும் டிரோன் தாக்குதலுக்கு எதிராக பாதுகாப்பு ஏற்படுத்தப்படும்.
தில்லி செங்கோட்டை உள்பகுதி, சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. சோதனை பணிகளுக்காக அடுத்த 2 மாதங்களுக்கு காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சுதந்திர தின விழாவின் போது பள்ளி மாணவர்கள், பார்வையாளர்கள் என பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர். 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவுள்ளது.
உளவுத்துறைகளுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றோம். தில்லியின் வடக்கு எல்லைகளில் மூன்று அடக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், செங்கோட்டை சாலைகளில் எல்லைகளில் போராடும் விவசாயிகள் நுழையாதபடி தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.