குஜராத்தில் சிறுநீரகத்தில் உண்டான கல்லை அகற்றுவதற்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றியதால் நோயாளி மரணமடைந்த நிலையில் நிவாரணத் தொகை வழங்க மருத்துவமனைக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலம் கெடா மாவட்டத்தில் உள்ள வாங்க்ரோலி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரபாய் ரவால். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு கடுமையான முதுகுவலி மற்றும் சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதையும் படிக்க | ஆப்பிள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய சென்னை பல்கலை. முன்னாள் மாணவி
இதன்காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிறுநீரகத்தில் கல் இருப்பது கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலமாக சிறுநீரகத்தில் உள்ள கற்களை அகற்ற மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து தேவேந்திரபாயின் அனுமதியுடன் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தேவேந்திரபாயின் உடல்நலத்தைக் காக்க சிறுநீரகத்தையே அகற்ற வேண்டியிருப்பதாக மருத்துவமனை திடீரென தெரிவித்து இடது சிறுநீரகத்தையே அகற்றியுள்ளது.
அறுவை சிகிச்சைக்குபின் தேவேந்திரபாயின் உடல்நலத்தில் மேலும் பாதிப்பை உணர்ந்த அவரது குடும்பத்தினர் அவரை வேறு ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 4 மாதங்களிலேயே உயிரிழந்தார்.
இதையும் படிக்க | கேரளத்தில் தொடரும் கனமழை: 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை
இதுகுறித்து புகார் தெரிவித்த அவரது குடும்பத்தினர் நுகர்வோர் ஆணையத்தை அணுகினர். இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி தேவேந்திரபாயின் குடும்பத்தினருக்கு ரூ.11.23 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்க மருத்துவமனைக்கு உத்தரவிட்ட மாநில நுகர்வோர் ஆணையம் நோயாளியின் பராமரிப்பு மற்றும் தகவலை முறையாக வழங்கத் தவறியதற்காகவும், அலட்சியமாக நோயாளியை அணுகியதற்காகவும் நடைபெற்ற சம்பவத்திற்கு மருத்துவமனையே பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.